உலகுக்கு மானுடத்தையும், கருணையையும் போதித்த பேரன்பின் தாய் தமிழ்! அந்த உயிர்மொழியினை அன்பைப் போதிக்க வில்லையெனக் கூறி, அமைச்சர் மரியவில்சன் அவமதிப்பு செய்வதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழகச் சட்டமன்றத்தில் மாண்புமிகு நிதியமைச்சர் மரியவில்சன் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்போது தமிழைத் தெளிவாக உச்சரிக்க தடுமாறியதையும், பார்த்து படிக்கும்போதே எண்களைப் பிழையாகக் கூறியதையும் மானியக்கோரிக்கை மீதான விவாத்தில் சுட்டிக்காட்டி, அதனை திருத்திக்கொள்ளக் கோரிய சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவர்களுக்கு, நிதியமைச்சர் மரிய வில்சன் கொடுத்த பதிலும், வெளிப்படுத்திய உடல்மொழியும் ஆணவத்தின் உச்சம். தன்னிடம் உள்ள பிழையை ஏற்றுக்கொண்டு, அதனைத் திருத்திக் கொள்ள முனைவதே அரசியல் முதிர்ச்சியாகும். அப்பண்பு துளியுமற்று, தன்னை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள முடியாதென அமைச்சர் மரியவில்சன் அதிகாரத்திமிரில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்ச்சான்றோர்கள் பலர் செந்தமிழால் சொற்போர் நடத்திய சட்டப்பேரவையில், இன்றைக்கு ஓர் அமைச்சர் பார்த்து வாசிக்கும்போதே திணறுவது அப்பேரவைக்கு இழுக்காகாதா?
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும், பிற மாநிலத்தவரும் நேரலையில் உற்று நோக்கும் ஓர் அவையில், உங்களைச் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் தமிழ் இனத்திற்கே இது மாபெரும் அவமதிப்பல்லவா?
அப்பிழையை ஒருவர் சுட்டிக் காட்டும்போது, நீங்கள் கோபம்கொள்வது ஏன்? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த திருநாட்டில், தமிழைப் பிழையற உச்சரிக்கவே ஒரு அமைச்சர் தடுமாறுவதா? என, நியாயமாக
மக்கள்தான் உங்கள் மீது கோபம்கொள்ள வேண்டும்!
நாங்கள் குற்றம் சொல்வதில் ஓர் அறம் உள்ளது. நீங்கள் கோபப்படுவதில் என்ன அர்த்தம் உள்ளது?
'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’. தமிழைப் பிழையின்றிப் பேச நீங்கள் பயிற்சியும், முயற்சியும் எடுத்தால், அது எளிதில் வசப்படும். அதைவிடுத்து நான் பிறப்பால் கிறித்தவன்; அதுவே எனக்கு அன்பைப் போதித்தது. எவ்வளவு தமிழ் படித்தாலும் அன்பைப் போதிக்காது" என்பது என்ன மாதிரியான அணுகுமுறை?
நீங்கள் கிறித்துவராக பிறந்திருக்கலாம்; பைபிள் உங்களுக்கு அன்பை போதித்திருக்கலாம். அதைச் சொல்வது உங்கள் உரிமை; உங்கள் உணர்வு; அதை நாங்கள் மதிக்கிறோம். நீங்கள் சார்ந்துள்ள மதம் அன்பைப் போதிக்கிறது என்று சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், எங்கள் அன்னை தமிழ்மொழி அன்பைப் போதிக்காது, பெறமுடியாது என்று சொல்ல நீங்கள் யார்? உடன்பிறந்த தம்பி குடும்பத்தை, உருட்டுகட்டையால் தாக்கிய உங்கள் அன்பையும், இரக்கத்தையும்தான் உலகமே கண்டதே அமைச்சர் அவர்களே!
உலகிற்கு அன்பை முதன்முதலில் போதித்த ஒரே மொழி, தமிழ் மொழிதான் என்பது உங்களுக்கு தெரியாதா?
'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்றும், 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு' என்றும் அன்பின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொன்ன தமிழ்க்குறள்களை அமைச்சர் படித்ததில்லையா?
உங்கள் கட்சியின் முகப்பில் உள்ள "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று உயிர்களின் சமத்துவத்தைப் போதித்தது எங்கள் தமிழ் இல்லையா?
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்று பகிர்ந்துண்ணும் உயரிய பண்பினை கற்பித்தது எங்கள் தமிழ் இல்லையா?
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றும், ஆதிபகவன் முதற்றே உலகு என்றும், உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்றும், உலகம் யாவையும் தாமுளவாக்கலும் என்றும்,
பாராடா உன் மானுட பரப்பை; மானுட சமுத்திரம் நானென்று கூவு! என்றும்,
புதியதோர் உலகம் செய்வோம்; கெட்டப்போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்! என்றும்,
"உலகு, உலகு" என்று உலக மாந்தர் அனைவரையும் உறவாகக் கருதி நேசித்தது, எங்கள் தமிழ் இல்லையா?
காக்கைக்குருவி எங்கள் சாதி; நீள் கடலும் வானும் எங்கள் கூட்டம்! என்று பேரன்பு கொண்டு பாடியது எங்கள் தமிழ் இல்லையா?
தன் தவறுக்கு மதத்தை உள்ளிழுத்து தப்பிக்க முயலும் மலிவான அரசியல் செய்யும் மரியவில்சன் அவர்களே!
எல்லா சமயங்களும், எல்லா வேதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன! என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
இறைமகன் இயேசு "அண்டை அயலானிடமும் அன்பு காட்டு" என்றார்;
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "பக்கத்து வீட்டுக்காரன் பசியோடு இருக்கும் பொழுது நீ உணவருந்தாதே" என்றார்;
தமிழ்ச்சைவ திருமுறையோ "அன்பே சிவம்" என்கிறது.
பெரும்பாவலர் பாரதியோ "பகைவனுக்கும் அருள்வாய் நன்னஞ்சே" என்று பாடினார்.
'வாடியப்பயிரை கண்டு வாடிய'
வள்ளலாரும், 'அன்புவழி' என்றே சமயநெறி வகுத்த வைகுந்தரும் வாழ்ந்து, வளர்த்த தமிழ் மொழியில் அன்பே இல்லை என்று கூறி, இழிவுபடுத்துவதை எப்படி ஏற்க முடியும்?
உலகுக்கு மானுடத்தையும், கருணையையும் போதித்த பேரன்பின் தாய் எங்கள் தமிழ்!
"தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே; தமிழைப் பழித்தவனைத் தாயே தடுத்தாலும் விடாதே!" என்றார் பாவேந்தர் தாத்தா பாரதிதாசன்.
அதே அவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் "தமிழ் நம் உயிருக்கு நேர்; தமிழ் நம் தாய்" என்று பேசும்போது, தாங்களோ "என் சமயம் மட்டுமே அன்பைப் போதித்தது, தமிழ் போதிக்கவில்லை" என்று பேசுவது ஏற்புடையதன்று. தமிழின் பேரன்பை நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் பிழைக்கு வருந்தித் திருந்துவதை விடுத்து கோபப்படக் கூடாது.
கிறித்துவ சமயப்போதகராக தமிழ்நாட்டுக்கு வந்த ஜி.யு.போப், தமிழ்த்தொண்டராகி, தனது கல்லறையில் தமிழ் மாணவனெனப் பொறிக்கச் சொன்ன வரலாறு தெரியுமா அமைச்சர் மரியவில்சனுக்கு?
இத்தாலியிலிருந்து வந்து தமிழ் இலக்கியங்களை இலத்தீனில் மொழிபெயர்த்து, ஜோசப் பெஸ்கி என்ற தனது பெயரை வீரமாமுனிவராக மாற்றிக் கொண்ட மகத்தான மாமனிதர் குறித்து தெரியுமா அமைச்சர் மரியவில்சனுக்கு? கிறித்துவ மதத்தைப் பரப்ப வந்த மதப்போதகர்களே இங்கு தமிழுக்குத் தொண்டாற்றித்தான் மறைந்தார்கள்.
*நீங்கள் பிறந்த மதம் கிறித்தவம் என்கிறீர்கள்! அது சரிதான். ஆனால் எத்தனை தலைமுறையாக நீங்கள் கிறித்தவர்கள்? அதற்கு முன்பு? ஆனால், ஐம்பதனாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாம் தமிழர்கள். கிறித்துவம் என்பது நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ள சமயம். ஆனால், உங்களின் மொழி என்ன? உங்களின் இனம் என்ன? உங்கள் இனத்திற்கான அடையாளம் என்ன? உங்கள் தாய்மொழி தமிழா? இல்லையா? என்பதை அதே அவையில் நீங்கள் விளக்க வேண்டும். கல்வி நிறுவனம் வைத்து நடத்துகிறேன் என்கிறீர்கள். அந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களை நினைத்து நாங்கள் கவலைப்படுகிறோம்.
ஐரோப்பா முழுவதும் கிறித்துவர்கள்தான். பிறகு ஏன் இத்தனை நாடுகள்? ஏனென்றால், மொழி வழியேதான் தேசிய இனங்களும், நிலங்களும். ஒரே கிறிஸ்தவ மதம்தான், ஆனாலும் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்தது ஏன்? காரணம் மொழி! அவர்கள் இங்கிலிஷ், இவர்கள் ஐரிஷ். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு காரணம் மதம். ஆனால், பாகிஸ்தானிலிருந்து, பங்களாதேஷ் பிரிந்ததற்கு காரணம் மதமல்ல, மொழி! தாய்மொழிதான் அடையாளம்.
அதனால்தான் I am English, I am French, I am Spanish, I am Irish என்று தாய்மொழியை வைத்து அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
எனவே, ஒரு மனிதனின் அடையாளம் என்பது அவருடைய தாய்மொழிதானே ஒழிய, ஏற்றிருக்கும் மதமல்ல; மதம் என்பது மாறிக்கொள்ள கூடியது. மொழியும், இனமும் மாறிக்கொள்ள முடியாதது என்ற
அடிப்படை உண்மையை உணராது, தமிழைப் பிழையாக உச்சரிப்பதும், அதனை நியாயப்படுத்தி, தமிழை அவமதிக்கும் வகையில் பேசுவதும், கிறித்துவச் சமயத்தை உள்ளிழுத்து, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழென்பது பேரன்பின் தாய்; அன்பின் உயிர்நிலை! எனவே, எங்களின் உயிர்மொழியான தமிழ் அன்பைப் போதிக்காது என்று இழித்துரைப்பது, தமிழையும், தமிழ்த்தேசிய இனத்தையும் அவமதிக்கும் செயலாகும்.
மாண்பமை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்னைத்தமிழை அவமதிக்கும் வகையிலே, பேசிய அமைச்சர் மரியவில்சன் தன்னுடையப் பேச்சுக்கு, அதே அவையில் மனம்வருந்தி மன்னிப்புக் கோர வேண்டும்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாடக்கோரும் தமிழகச் சட்டமன்றத் தீர்மானம் வரவேற்புக்குரியது!
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள தீர்மானத்தை முழுமையாக வரவேற்கிறேன்.
மொழியை ஏற்றிருக்கிற நிலம்தான் தேசமாகவும், மொழியை அடிப்படையாகக் கொண்டுள்ள மக்கள் கூட்டம்தான் தேசிய இனமாகவும் வரையறுக்கப்படுகிறது. ஒரு இனத்தின் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, வழிபாடு, வாழ்வியல், அரசியல் எல்லாம் மொழியிலிருந்துதான் பிறக்கிறது. அதனால்தான், மொழியைத் தாயென்று போற்றுகிறோம். மொழியே ஒரு இனத்தின் முகம், முகவரி, அடையாளம் என எல்லாவுமாகத் திகழ்கிறது. தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாட்டில் தமிழை முதன்மைப்படுத்தப்பட வேண்டியது தமிழர் நிலத்தை ஆளுகை செய்யும் ஆட்சியாளர்களின் தார்மீகக் கடமையாகும். அந்தவகையில், தமிழர் தாய்நிலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்படுவதை உறுதிசெய்ய முன்வர வேண்டும். அதுவே தமிழ்த்தேசிய இனத்தின் இறையாண்மையையும், தமிழர்களின் தன்மான உணர்வையும் மதித்துப் போற்றுவதாக அமையும். அதுபோல, ஒவ்வொரு தேசிய இனத்தின் தாயகத்திலும் அந்தந்த இனத்தின் தாய்மொழியைப் போற்றும் பாடலே முதன்மையாக இடம்பெற வேண்டும்.
வேறுபட்ட மொழி, பண்பாடு, வாழ்வியல் கொண்ட வெவ்வேறு தேசிய இனங்கள் ஒன்றுபட்டு, ஒரே நாட்டுக்குள் வாழ்வதால்தான் வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டின் பன்மைத்துவம் போற்றப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளைவிட அதிக மாறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், இந்நாட்டில் பல்வேறு மொழிவழித் தேசிய இனங்கள் ஒரே நாட்டுக்குள் ஒன்றிணைந்து வாழ்வதைக் கண்டு, உலக நாடுகள் வியக்கின்றன. அத்தகைய தேசிய இனங்களின் தன்னுரிமையையும், தனித்துவ அடையாளத்தையும் பாதுகாப்பதே இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டுக்கு
ஏற்றதாகும். மாறாக, தேசிய இனங்களின் உரிமைகளை மறுத்து ஒற்றை மொழியையும், ஆதிக்கத்தையும் திணிக்க முற்பட்டால், அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு உணர வேண்டும்.
ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே வரி, ஒரே இராணுவத்தளபதி, ஒரே உணவுச்சந்தை என எல்லாவற்றையும் ஒற்றைமயப்படுத்தும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, நாட்டுப்பண்ணை மட்டும் இரண்டாகத் திணிப்பது கேலிக்கூத்தாகும். மதச்சார்பு கொண்ட ‘வந்தே மாதரம்’ எனும் பாடலை வலியத் திணிப்பதும், தேசிய இனங்களின் மொழியைப் போற்றும் பாடலை பின்னுக்குத் தள்ளுவதுமானப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்த்தாய் வாழ்த்தே தமிழ்நாட்டில் முதன்மைப்பாடலாகப் பாடப்பட வேண்டும் எனும் தமிழர்களின் ஒருமித்தக் கருத்தோட்டத்தின் விளைவாக, தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றிய ஆளும் தவெக அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்களுக்கும், தீர்மானத்தை ஆதரித்துத் துணைநின்ற அனைத்துக்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு பகுதி வன கிராம மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்துக்குட்பட்ட தும்மக்குண்டு, மேகமலை உள்ளிட்ட 98 மலை கிராமங்களில் பல தலைமுறையாக வசித்து வரும் 5000க்கும் அதிகமான மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்ற முயல்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்ப் பழங்குடி மக்கள் மேகமலை, வருசநாடு பகுதி வன கிராம பகுதியில் உள்ள நிலங்களில் இலவம், முந்திரி, மிளகு, ஏலம் உள்ளிட்ட பயிர்களை விளைவித்து வருகின்றனர். வன உயிரினங்கள் பெருமளவு அழிந்துவிட்ட தற்காலச் சூழலில் இயற்கை சமநிலைப் பேணுவதில், மனிதர்களால் வளர்க்கப்படும் கால்நடைகள் பெருமளவு பங்கு வகிக்கிறது என்பதே எதார்த்த உண்மையாகும்.
மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் காலங்காலமாக மலைகளுக்கும், காடுகளுக்கும் அவற்றில் வாழும் உயிரினங்களுக்கும் பாதுகாவலனாய் வாழ்ந்து வருகின்றனர். பன்மடங்கு அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டுள்ள நவீன உலகத்தின் அத்தனை வசதி வாய்ப்புகளையும் புறக்கணித்துவிட்டு, இன்றளவும் இயற்கையோடு இயற்கையாக வாழ்கின்ற அப்பெருங்குடி மக்கள் போற்றுதலுக்குரியவர்கள். அவர்களின் வாழ்வாதாரம் முழுக்க முழுக்கக் காடுகளையும், மலைகளையும் சார்ந்தே இருப்பினும், இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் அவர்களின் செயல்பாடுகள் ஒருபோதும் இயற்கையை அழிப்பதாகவோ, சிதைப்பதாகவோ இருந்ததில்லை. அந்த அளவுக்கு இயற்கையோடு இயைந்த வாழ்வியலை மலைவாழ் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அம்மக்களை வெளியேற்ற வழிவகுக்கும் தீர்ப்பானது இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமே தவிர எவ்வகையிலும் பாதுகாப்பதாய் அமையாது.
உண்மையில் அரசு மற்றும் தனியார் பெருமுதலாளிகள் வணிக நோக்குடன் அமைக்கும் தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு கம்பிவடம் பதித்தல், மின் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்கள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்டவற்றால் மட்டுமே மலைகளும், காடுகளும், நீர்நிலைகளும் அவற்றை நம்பி வாழும் வன உயிரினங்களும் பேரழிவைச் சந்தித்து வருகின்றன. அவற்றையெல்லாம் அனுமதித்துவிட்டு, பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் பழங்குடியின மக்களையும், மலைவாழ் மக்களையும் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்துவது, தனியார் முதலாளிகள் அந்நிலங்களை ஆக்கிரமித்து இயற்கையை மென்மேலும் சீரழிக்கவே வழிவகுக்கும்.
அதுமட்டுமின்றி, மலைக்காடுகளையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டுமென்ற உண்மையான அக்கறை இருக்குமாயின், ஒவ்வொரு நாளும் காடுகளில் முறைகேடாக மரங்கள் வெட்டப்பட்டு டன் கணக்கில் கடத்தப்படுவதையும், சொகுசு விடுதிகள், அடுக்குமாடி கட்டிடங்கள், தண்டவாளங்கள், சாலைகள், தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு கருவிகள், அறிவியல் ஆய்வகங்கள் ஆகியவை அமைப்பதற்காக, வன விலங்குகளின் வாழ்விடங்களும், வழித்தடங்களும் சுருக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை எடுப்பதே சரியானதாக இருக்கும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு கடந்த 2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு பகுதி வன கிராம மக்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்குவதோடு, மலைக் கிராமங்களை விட்டு மக்களை வெளியேற்றும் முடிவைக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என்றும் சொல்லும் கர்நாடக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறார்..! ஆனால் பாதிக்கப்பட்ட நாம் அனைத்து கட்சியை கூட்டுங்கள் என்று கூறினால் முதல்வர் மறுக்கிறார்.. தமிழ்நாட்டின் நலனுக்காக தலைமைச்செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் நடத்துகிறார் என்ற செய்தியே மத்திய மற்றும் கர்நாடக அரசிற்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கும்.. சீமான் பேச்சு..
#Chennai | #NTK | #Seeman | #Mekedatu | #CauveryRiver | #PolimerNews
வருங்காலங்களில் இந்த சிக்கல் வரும் போது நமது முன்னோர்கள் வேடிக்கை பார்த்து நின்றார்கள் என்ற வருங்கால தலைமுறை சொல்லிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த போராட்டம்!
செந்தமிழன் சீமான்
எது அவர் கடவுளின் குழந்தையா..? தற்குறிகள் என்று நாங்கள் ஏதோ போற போக்கில் பேசவில்லை.. நீங்கள் இப்படியெல்லாம் பேசுவதால் தான் சொல்கிறோம்..!
ஒரு அமைச்சரை கேள்வி கேட்டால் நான் தூத்துக்குடிக்கு வந்து பதில் சொல்கிறேன் என்கிறார்.. நீங்கள் தூத்துக்குடிக்கு மட்டும் அமைச்சரா இல்லை தமிழ்நாட்டு அமைச்சரா..? அமைச்சர் ஸ்ரீநாத் பேச்சுக்கு சீமான் நறுக் கேள்வி
#Chennai | #NTK | #Seeman | #TVK | #MinisterSrinath | #PolimerNew
அரை மணி நேரத்திற்கு மேலாக அமைச்சர்கள் முதல்வரை புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. முதல்வர் எழுந்து அதெல்லாம் வேண்டாம் பட்ஜெட்டை படியுங்கள் என்று சொன்னாரா..? அமைதியாக உட்கார்ந்தே இருக்கிறார்.. சீமான் கேள்வி
#Chennai | #NTK | #Seeman | #Mekedatu | #CauveryRiver | #PolimerNews
எத்தனையோ சம்பவங்களில் மக்கள் இறந்த போது அவர்களுக்கெல்லாம் அரசு வேலை கொடுக்கப்பட்டதா..? இன்று நீங்கள் முதல்வராகாவிட்டால் யார் கொடுத்திருப்பார்கள்..? கரூர் விவகாரத்தில் சீமான் கேள்வி
இன்று தொடங்கி இருக்கும் இந்த புரட்சிகர அரசியல் பயணம் புதிய ஒரு தமிழ்நாட்டை உருவாக்கும் என்றும் சீமான் பேச்சு..
#Chennai | #NTK | #Seeman | #KarurIssue | #TNGovt | #GovtJob | #PolimerNews