இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அறிமுகமான கொடி. அடர்சிவப்பு - மஞ்சள்- அடர்சிவப்பு நிறத்துடன் இரட்டைப் போர் யானைகள், வாகைப்பூ மற்றும் 28 நட்சத்திரங்களுடன் அரசியல் உலகை அதிர வைத்த கொடி.
தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களின் உறுதி எனும் உயிர்க் கயிற்றில் உயர்ந்த கொடி அன்று. உலகத் தமிழர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் உற்சாகத்துடன் உயர்ந்து பறக்கும் கொடி இன்று.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஆட்சி மாற்றத்தை மட்டுமே நிகழ்த்திக் காட்டி இருக்கும் கொடி மட்டுமன்று இது, தன் படபடக்கும் பட்டொளி வீசிப் பறத்தலால், மக்களை ஆண்டாண்டுக் காலமாக வாட்டி வதைத்த லஞ்ச ஊழல் அழுக்குகளை அடித்து விரட்டிய அசாத்தியக் கொடி. ஒவ்வோர் உயிரின் கனவையும் சாத்தியமாக்கவே பறக்கும் நித்தியக் கொடி. உழைக்கும் வர்க்கத்தினரின் சத்தியக் கொடி.
ஆட்சி அதிகார அரசியலுக்கான கொடியாக மட்டும் அறிமுகமாகாமல் அகிலமெங்கும் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்களின் தொப்புள்கொடி உறவால் விண்முட்டப் பறக்கும் விஜயக் கொடி. வீரக் கொடி. வெற்றிக் கொடி. தொடர் வீர வரலாற்றுக் கொடி.
சீரிளமையுடன் திறன் வியக்கப் பறக்கட்டும் இக்கொடி. கூர்நுட்பத்துடன் உலகத் தமிழர் ஒவ்வொருவருக்கும் திசைகாட்டியாய்ச் சிறக்கட்டும் இக்கொடி. சிறகடிக்கட்டும் இக்கொடி என நெஞ்சார வாழ்த்துகின்றனர் எதிர்வரும் இளந்தலைமுறையினரும். இதயமார ஆசிர்வதிக்கின்றனர் இன்னும் பல்லாண்டு வாழத்துடிக்கும் எல்லாத் தலைமுறையினரும்.
எல்லோரும் ஒற்றைக் குரலில் உரக்கச் சொல்கின்றனர்.
நம் வெற்றித் தலைவன் கொடி உயரட்டும்.
நம் தவெக கொடி பறக்கட்டும்.
இத் தரணி எங்கும் தமிழர் மானம் தழைக்கட்டும்.