என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கூ. பிரேம்குமார் அவர்கள், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான திரு. கூ. பிரேம்குமார் அவர்களையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் திரு கூ. பிரேம்குமார் அவர்களை, மனத்தளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும்.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம்.
தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை.
திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது.
தந்தை பெரியாரும் பெருந்தலைவர் காமராஜரும் பேரறிஞர் அண்ணாவும் விதைத்த நல்லிணக்கம் பேசும் சமூக நீதி விதைகள் ஆழமாய் வேரூன்றிய மாபெரும் மதச்சார்பற்ற மண் இது. இத்தகைய நம் தமிழ்நாட்டு மண்ணில் என்றைக்கும் ஃபாசிச சக்திகள் வேரூன்ற மட்டுமன்று, காலூன்றவே இயலாது. அதோடு பாசிச மனநிலை கொண்ட ‘மக்கள் விரோத’ ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாகத் தி.மு.க.விற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி என்பதுதான் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேலான தேர்தல் வரலாறு.
தேர்தல் ஆணையத்திடம் என்னதான் பொறுப்பு இருந்தாலும், காபந்து அரசான கபட நாடகத் தி.மு.க. அரசு, தன் கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கு மட்டுமல்லாமல் நம் வேட்பாளர்களுக்கும் பரப்புரை செய்ய நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் நீட்டிக்கவே செய்கின்றது.
கடைசி நேரம் வரை காத்திருக்கச் செய்து, அனுமதிக் கடிதத்தைத் தாமதமாக அளித்து, நமக்கான பிரசார முன்னேற்பாடுகளைச் செய்யவிடாமல் நெருக்கடி தருவது, கடைசி நேரத்தில் த.வெ.க.வின் பரப்புரைக்கான அனுமதியை ரத்து செய்ய வைப்பது, ரத்து செய்வது, நமது பிரசார நிகழ்ச்சிகளுக்கான அனுமதி மற்றும் ரத்து குறித்து ஊடகங்களில் புனைவுச் செய்திகள் வெளியிடச் செய்து மக்களைக் குழப்புவது என்று தி.மு.க.வின் பரம்பரைத் தில்லுமுல்லுகள் தொடரத்தான் செய்கின்றன.
பவள விழா பாப்பா…
என்ன தான் தில்லுமுல்லு செய்தாலும்... நீ தடுத்துவிடலாம் என்று நினைப்பது போல் த.வெ.க. ஒன்றும் பழைய ஃபார்மட்டில் ரோட்டில் பிரசாரம் செய்வதை மட்டுமே நம்பி இருக்கவில்லை. த.வெ.க.விற்கு ஆதரவாகத் தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த தன்னெழுச்சியான, தன்விருப்பமான பிரசாரம் தமிழகமெங்கும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாக மாறி நடந்துகொண்டுதான் இருக்கிறது.
த.வெ.க.வின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என்று, ‘தான்’ என்ற அகந்தையில் இருக்கும் ஆதாய அரசியல் சூதாடும் அனுபவசாலிகள் அனைவரும் மக்கள் ஓர் அமைதிப் புரட்சிக்குத் தயாரானதை மறந்துவிட்டு ஆடுகின்றனர். இந்த ஆட்டமெல்லாம், வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி வரைதான். ஏப்ரல் 23 அன்றே, ஊழல் சக்திகள் மட்டுமல்லாது, மற்றும் பலருடன் ஃபாசிச சக்திகளும் விசில் புயலில் வீழ்வது உறுதி.
Limitation இல்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, Limitation இல்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி தி.மு.க.வை இந்தத் தேர்தலில் ஆட்சிக்கு வரவிடாமல் limit செய்து, மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி.
மக்களே…
இந்த வேடதாரிகளை நம்பாமல் விழிப்புடன் இருப்போம். வெல்வோம். வாகை சூடுவோம்.
வரலாறு படைப்போம்.
புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், காசாக்குடிமேடு, கிளிஞ்சல்மேடு கிராமங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இந்த அடாத செயல், அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக விடுவித்து, அவர்களது படகுகளையும் மீட்டுத் தர ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே நேரத்தில், இலங்கை நீதிமன்றத்தால் கடந்த 3ஆம் தேதி விடுவிக்கப்பட்ட பிறகும் தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேர், சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை. அவர்கள் அங்கே பரிதவித்து வருவதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளது வேதனை அளிக்கிறது. மேலும் தமிழக மீனவர்கள் 3 பேர், இலங்கை நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறையில் வாடுகின்றனர்.
மீனவர்களுக்குத் தொடர்ந்து இதுபோல நிகழ்வதைத் தடுக்க, தமிழக அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாம் கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழக முதல்வர் எண்ணுகிறாரா? இது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் அனைவரையும் உரிய முறையில் மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும். மனிதாபிமான முறையில் இலங்கை அரசிடம் பேசி, தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், ஒன்றிய அரசை உண்மையாகவே உணர்வுப்பூர்வமாக வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன?
வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்?
இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம்.
இப்போதுகூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான்.
அதுமட்டுமா? தி.மு.க. தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் த.வெ.க.வைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்துள்ளார்.
எனவே, என்னருமைத் தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.
நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி.
தி.மு.க. அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி.
என் நெஞ்சில் குடியிருக்கும்
அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில்.
தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத்
தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி.
ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி.
இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.
நமது சின்னம் விசில்.
நல்லவர்கள் சின்னம் விசில்.
நாடு காப்பவர்கள் சின்னம் விசில்.
ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில்.
வெற்றிச் சின்னம் விசில்.
வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.
விசில் போடுவோம்.
#தமிழகத்தில் மற்றும் அகில இந்தியா...
தமிழக வெற்றிக்கழகம்&காங்கிரஸ் அமைய வேண்டும் அமைந்தால் புதிய புரட்சி உண்டாகும் நல்லதோர் இந்தியா.. நன்றி ராகுல் காந்தி ஜி ❤🔥