தேர்தல் படுதோல்விக்குப் பிறகு, உருப்படியான மக்கள் பணிகளைச் செய்யாமல், வீட்டு சோபாவில் (Sofa) உருண்டு கிடந்து ட்வீட் போட்டு விளையாடிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்!
இளைஞர்களைக் கவர்வதாக நினைத்துக்கொண்டு, தங்களையே 'GenZ' ஆகக் கற்பனை செய்து, தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து இவர்கள் செய்யும் வயதுக்கு ஒவ்வாத காமெடிகளைப் பார்த்தால்,
'புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்ட' கதை தான் நினைவுக்கு வருகிறது. இந்த பிம்பிளிக்கி பிளாப்பி வேலைகளை விட்டுவிட்டுப் பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுங்கள்.
உங்களுக்கு ஓய்வு நேரம் மிக அதிகமாக இருப்பதை நாங்கள் அறிவோம்; அதை ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் செலவிடுங்கள்!
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு அமைச்சர்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்
வில்லிவாக்கத்திற்கு துணை முதல்வர் முதல் அவரது மொத்த குடும்பமுமே வந்ததனர், சென்றனர். ஆனால், இன்று வில்லிவாக்கத்தில் ஒரு புயல் வீசியிருக்கிறது. மக்கள் திரளுடன் வீசிய நம் வெற்றித் தலைவர் அவர்களின் பிரசார புயல் அது. ஆதிக்க அரசியலையும், பண அரசியலையும் ஆணிவேரோடு வீசியெறிந்துள்ள புயல் அது. மக்களின் ஜனநாயக எழுச்சியோடு மக்களுக்கான நல்லாட்சி உறுதியாகப் பிறக்கப்போகிறது.
நிச்சயம் வெல்வோம்!
வாகை சூடுவோம், வரலாறு படைப்போம்!
1/3
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போரிட்டு வெற்றி கொண்ட மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாளில், அவரின் தியாகத்தைப் போற்றுவோம்!
அவரைப் போலவே நாமும் தாய்த்தமிழ்நாட்டினைக் காப்போம்!
என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கூ. பிரேம்குமார் அவர்கள், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான திரு. கூ. பிரேம்குமார் அவர்களையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் திரு கூ. பிரேம்குமார் அவர்களை, மனத்தளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும்.
என் நெஞ்சில் குடியிருக்கும் என் சொந்தங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம்.
எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்த நாள்முதல் சொல்லொணா நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் சொல்லவியலா வேதனைகளையும் இதுவரை நமக்கு விளைவித்தே வந்தவர்கள் வேறு யார்?. நமது அரசியல் எதிரியான மக்கள் விரோத தீயசக்தி திமுகவும் கொள்கை எதிரியான மற்றும் பலருடன் களம் கானும் பிளவுவாத சக்தியான பாஜகவும் என்று நம் மக்களே அறிவர்.
மக்களுக்காக அவர்தம் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்த இந்த விஜய், பாசிச மனநிலை கொண்ட ஜனவிரோதக் கட்சிகளின் அழுத்தங்களுக்கா அடிபணிவான்?. திசைதிருப்பல் முதலீட்டுக் கழகங்களின் நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் குனிந்து கூழைக் கும்பிடா போடுவான்?. ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது.
இறைவன் அருளால் இயற்கையின் துணையுடன் மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி, மாபெரும் மக்கள் சக்தியுடன் உலகெங்கும் உள்ள நமது தோழர்களின் பேராதரவுடன் முதன்மை அரசியல் சக்தியாகக் களத்திற்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தமிழக மக்கள் நலன் சார்ந்த நோக்கத்தையும் அதன் தாக்கத்தையும் எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை வரும் தேர்தலில் நம் மக்களே அவர்களுக்கு சரியான பாடம் புகட்டி உணர்த்துவர்.
நம்மை எள்ளி நகையாடியக் கூட்டம் மட்டுமன்று, இந்த நாடே அறியும்,
அளக்கமுடியாத ஆழ்கடல் - விலக்க முடியாத விரிவானம் த.வெ.க என்று.
நேர்மையின் நெருப்புக்கோளம் - மக்களின் நெஞ்சில் நீக்கமறக் குடியிருப்பது த.வெ.க என்று. சமூகநீதிக் காவலரண் - ஜனநாயகப் பேரரண் த.வெ.க என்று.
இப்படிப்பட்ட த.வெ.கவை ஊழல் விஷ சக்திகளாலா வீழ்த்த முடியும்?.
பாசிச சக்திகளாலா பகைவெல்ல முடியும்?.
மக்களே…மீண்டும் சொல்கிறேன். இத்தனை நெருக்கடிகளையும் இத்தனை நிர்பந்தங்களையும் இத்தனை வேதனைகளையும் உங்கள் விஜய் தாங்கிக்கொண்டு நிற்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது உங்களின் உயர்தனி உள்ளன்பு மட்டும்தான்.
எந்த அரசியல் கட்சி முன்புலமோ பின்புலமோ இன்றி அரசியலுக்கு வந்த என்னை
‘நீ வாப்பா’… ‘நீ வா தம்பி’… ‘நீ வாண்ணா’… ‘நீ வா நண்பா’… ‘நீ வா தோழா’… ‘நாங்க பாத்துக்கறோம்’… என்ற உங்களின் பேரன்பும் பேராதரவும் மட்டுமே என்னை இயக்கும் மாபெரும் உந்துசக்தி என்பதே உண்மை.
இப்போதும் சொல்வேன். எப்போதும் சொல்வேன். உங்களையும் என்னையும் இந்த உலகத்தில் எந்த அதிகார சக்தியாலும் எந்த அராஜக சக்தியாலும் எந்த தீயசக்தியாலும் எந்த பாசிச சக்தியாலும் எந்த ‘மற்றும் பலர்’ சக்தியாலும் பிரிக்கவே இயலாது. அப்படிப் பிரிக்க நினைக்கும் அனைத்து சக்திகளையும் மக்கள் அக்குவேறு ஆணிவேறாகத் தனித்தனியாகப் பிரித்து, தூக்கி வீசி எறியப் போவது உறுதி.
பணத்தை மட்டுமே நம்பி தத்தம் சுயலாபங்களுக்காக அரசியல் களமாடும், எதிர்வரும் நம் தலைமுறையின் கனவுகளை அடகு வைக்கத் துடிக்கும் அடிமை அரசியல் சூதாடிகளின் வேறு எந்தச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்தாலும், பிளவுவாத சக்திகளுக்கான மறைமுக அல்லது நேரடி ஆதரவாக மட்டுமே அது மாறும்.
ஆகவே, எப்போதும்போல அடைமழையாக இந்த அரசியல் சூதாடிகளின் ஊழல் – லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று, நீங்கள் அனைவரும் திருவிழாக் கோலம் பூண்டு, விசில் புரட்சிக்குத் தயாராகி, குடும்பம் குடும்பமாக சென்று வாக்களிக்க வேண்டிய, எவ்வித மறுசிந்தனைக்கும் இடம் தராத ஒற்றைத் தேர்வாக “விசில் சின்னம்” மட்டுமே இருக்க வேண்டும் என உங்களை இருகரம் கூப்பி வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
வாகை சூடுவோம்.
வரலாறு படைப்போம்.
வெற்றி நிச்சயம்..
விருதுநகர் அருகே, கட்டனார்பட்டியில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து பூரண குணமடைய விழைகிறேன். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் மக்களுக்கான உண்மையான ஆட்சி அமைந்த உடன், பட்டாசுத் தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.
இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.