தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
இதைப் பற்றி சட்டமன்றத்தில் ஏதாவது ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினார்களா?
மக்கள் அறியாமை அரசியலில் பெரும் மூலதனம்...🥱
சட்டமன்றத்தில் இவனுங்க இரண்டு { தவெக = திமுக }பேரும் போடுற கூத்துக்கு மக்கள்தான் பலிகேடு..... 💯
மேகதாது அணையை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்து!
@CMOTamilnadu@TVKVijayHQ
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் ஆளும் தவெக அரசின் போக்கு மிக மிகத் தவறான முடிவாகும். நடுவர் மன்றம் கோரும் திருத்தத்தை சட்டமன்றத் தீர்மானத்தில் எதிர்க்கட்சியான திமுக சேர்க்கக் கோரியதும், அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு, திருத்தித் தீர்மானத்தை இயற்றியிருக்கும் செயல்பாடு ஆளும் தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் காவிரி நதிநீர் உரிமையில் அக்கறையோ, அடிப்படைப்புரிதலோ இல்லை என்பதையே காட்டுகிறது. இத்தோடு, கடந்த திமுகவின் ஆட்சியிலேயே நடுவர் மன்றம் கோரிக் கடிதம் எழுதப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் விஜய்யும் கூறியிருப்பது கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை நாடினால், அது தற்போதிருக்கும் நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்தாக முடியும் எனும் குறைந்தபட்சப் பார்வையும், தொலைநோக்குச் சிந்தனையும்கூட இல்லாது, முன்வைக்கப்படும் நடுவர் மன்றக் கோரிக்கையை மிகக் கடுமையாக எதிர்க்கிறேன்.
கீழ்ப்பாசன மாநிலங்களின் அனுமதியும், ஒப்புதலும் இல்லாது, மேல்பாசன மாநிலங்கள் அணை உள்ளிட்ட கட்டுப்பானப்பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்பது மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ச்சிக்கலில் பின்பற்ற வேண்டிய விதி; சட்டம். இதனை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டல்களும் உறுதிசெய்கின்றன. கர்நாடகத்தைப் பொறுத்தவரை எல்லா விதிகளையும், சட்டங்களையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு அடாவடித்தனம் செய்வதும், முழுக்கத் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவதுமானப் போக்குகளில்தான் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. கபினி அணை, ஹேமாவதி அணை, ஹாரங்கி அணை உள்ளிட்டவை யாவும் விதிகளுக்கும், சட்டத்திற்கும் புறம்பாகவே கட்டப்பட்டது. விதிகளுக்கு மாறாகவே கர்நாடகத்தின் பாசனப்பரப்பும் விரிவுப்படுத்தப்பட்டது. அதன் நீட்சியாகவே, தற்போது மேகதாதுவிலும் அணை கட்டி, காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தனதாக்கிக் கொள்ளத் துடிக்கிறது கர்நாடக அரசு. மொத்தத்தில், தமிழ்நாட்டை மாறி ஆண்ட ஆண்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் காவிரி உரிமை காவு கொடுக்கப்பட்டது என்றே கூறலாம்.
தமிழ்நாட்டு அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது ஏற்கனவே இருக்கும் விதிகளின்படியே சட்ட விரோதம்தான் எனும்போது புதிய நடுவர் மன்றம் என்பது தேவையில்லாத ஒன்றாகும். ஒருவேளை, நடுவர் மன்றம் புதிதாக அமைக்கப்பட்டால் சிக்கலை மேலும் நீட்டிக்கவும், இன்னும் பல காலம் அதனை இழுத்துக்கொண்டே போகவும் வழிவகை செய்திடும். ஒருவேளை, அந்நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்குமானால் சட்டப்பூர்வமாக இருக்கும் கடைசி வாய்ப்பையும் தமிழ்நாடு இழக்க நேரிடும். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியில், காவிரி நதிநீர் உரிமைகளுக்கென நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித்தீர்ப்பு, தீர்ப்பு அரசிதழில் வெளியிடு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆணையம் எனப் பலகட்டப் படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி, 177.25 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தர வேண்டும். அதனைத் தர மறுத்து சண்டித்தனம் செய்து வரும் கர்நாடக அரசு மழை, வெள்ளக் காலங்களில் பெய்யும் மழைநீரை வெளியேற்றும் வடிகாலாக மட்டுமே தமிழ்நாட்டை இதுவரைப் பயன்படுத்தி வருகிறது. மற்றபடி, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தண்ணீரை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, நடுவர் மன்றத் தீர்ப்பு என எல்லாமிருந்தும் கர்நாடக அரசு அவற்றை ஏற்க மறுத்து அட்டூழியம் செய்கிறது.
காவிரியாற்றின் `குறுக்கே அணை கட்டுவதையும் தடுக்கவும், தமிழ்நாட்டுக்கு உரிய நதிநீர் பங்கீட்டைத் தரவும் சட்டவிதிகள் வலியுறுத்துகின்றன. நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வழிகாட்டுகின்றன. இருந்தபோதிலும், அவற்றைப் புறந்தள்ளி எதேச்சதிகாரப்போக்கோடு நடந்துகொள்கிறது கர்நாடக அரசு. தமிழ்நாட்டுக்கான உரிய நதிநீர் பங்கீட்டையும், நீதியையும் உறுதிசெய்ய சட்டப்பூர்வக் காரணிகள் இருக்கின்றன. அவற்றைக் கர்நாடக அரசு ஒருநாளும் மதித்து ஏற்பதில்லை என்பதுதான் இங்கிருக்கும் முதன்மைச்சிக்கல். உண்மை இவ்வாறிருக்க, மேகதாதுவுக்கு எதிராக நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் கோரிக்கை என்பது துளியும் ஏற்புடையதல்ல; அது தேவையற்ற சிக்கலையே புதிதாய் உருவாக்கும். நடுவர் மன்றம் கோரி இயற்றப்பட்ட இத்தீர்மானம் முழுக்க முழுக்க தமிழின விரோதமாகும். அதனைக் கண்டித்து வரும் 27.06.2026 அன்று தஞ்சாவூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தீர்மான நகலெரிப்புப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் பங்கேற்கிறது எனப் பேரறிவிப்புச் செய்கிறேன்.
ஆகவே, காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் முடிவைக் கைவிட்டு, அத்தீர்மானத்தைப் பின்வாங்கி, புதிய தீர்மானத்தை இயற்ற வேண்டுமெனவும், அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து, தமிழ்நாட்டுக்குரிய காவிரி நதிநீர் பங்கீட்டு உரிமையை உறுதிசெய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய சட்டப்போராட்டங்களையும், ஆக்கப்பூர்வப் பணிகளையும் தொடங்கிட வேண்டுமெனவும் தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
திருவள்ளூர், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு : தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், தொடர்புடையவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
@CMOTamilnadu@TVKVijayHQ
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா நச்சுக்காற்று கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிப்பு; 60க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி எனும் துயரச்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனர் பெண்கள் என்பது துயரத்தை மேலும் அதிகரிக்கிறது. உயிரிழந்தத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.
ஏற்கனவே, வடசென்னை பகுதியில் அவ்வப்போது நிகழும் நச்சுக்காற்று கசிவால் அப்பகுதி மக்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த சூன் 2 அன்று துறைமுகம் பகுதியிலிருந்து கசிந்த நச்சுப்புகையால் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இருந்தவர்களே மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதும் நிகழ்ந்தேறியது. அதன்பிறகாவது, தவெக அரசு தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது திருவள்ளூரில் இத்தகைய கொடும் விபத்து நிகழ்ந்திருக்காது. தொழிற்சாலைகளில் அரசு தொடர்ச்சியாக முறையான ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே இதுபோன்ற கொடும் விபத்துகள் நிகழ்வைத் தவிர்க்க முடியும்.
சூழலியல் சீர்கேடுகளைப் பற்றிக் கவலைப்படாமல், வளர்ச்சி என்ற பெயரில், வேலைவாய்ப்புகளைக் காரணமாகக் காட்டி, பன்னாட்டு, உள்நாட்டு தனியார் தொழிற்சாலைகளுக்கு சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும் அரசுகள், இதுபோன்ற தொழிற்சாலைகள் விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கின்றவா? என ஒருநாளும் கண்காணிப்பதுமில்லை; சோதிப்பதுமில்லை. அதன் விளைவாகவே, இதுபோன்ற கோரவிபத்துகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆகவே, தவெக அரசு இனியேனும் தமிழ்நாடு முழுவதுமுள்ள தொழிற்சாலைகளை ஆய்வுசெய்து தொழிலாளர்களின் பாதுகாப்பினையும், சூழலியல் நலத்தினையும் உறுதி செய்திட வேண்டும். மேலும், இவ்விபத்து நடந்தேறிய கன்னிகைப்பேர் பகுதியில் வாழும் மக்களுக்கு எவ்வித உடல்நலக்குறைபாடும் ஏற்படாவண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
ஆகவே, உழைக்கும் தொழிலாளர்களின் உயிர்களைப் போக்கிய இக்கோர விபத்துக்கானப் பின்புலமும், பின்னணியும் கண்டறியப்பட்டு, தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஜனநாயக சோபாவில் அமர்ந்திருக்கும்
பக்கா மாஸ் கட்சியின் தலைவரே!
மகத்தான மங்குனி முதல்வரே!
என்னாச்சு உங்களுக்கு?
உலக மானுடக்கூட்டத்தின் ஆணவத்தையும், அகம்பாவத்தையும் ஒட்டுமொத்தமாகக் குத்தகை எடுத்ததுபோல, பரப்புரைக்கூட்டங்களில் மிதப்போடும், இறுமாப்போடும் ஆவேசம் பொங்கப் பேசும் (!) நீங்கள், சட்டமன்றத்தில் அமைதியின் திருவுருவாய், தன்னடக்கத்தின் மனித வடிவமாக அமர்ந்திருப்பது ஏனோ? சாந்தச்சொரூபியாக மாறிப் போன மர்மம் என்ன? எங்கே போனது உங்கள் ஆவேசம்? எங்கே போனது உங்கள் கோபக் கணைகள்? எங்கே போனது உங்களது சீற்றக்குரல்?
சட்டம் ஒழுங்கு குறித்துக் கேட்டால் உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் நீங்கள் பதில் சொல்லாது, கல்வித்துறை அமைச்சரைப் பதில் சொல்ல வைப்பது ஏன்? திரைப்படங்களில் உங்களது ‘பஞ்ச் டயலாக்குகளை’ துணை நடிகரை வைத்துப் பேசவிட்டால், அமைதியாக நிற்பீர்களா முதல்வரே? அதனைவிட அபத்தமாக அல்லவா இது இருக்கிறது. திரையில் காணும் ஆவேசமெல்லாம் தரையில் காணாமல் போனதேன்? ‘அவ்ளோ வொர்த் இல்ல’ என உங்களது கட்சியின் மகளிர் தினக் கூட்டத்தில் பேசினீர்களே, அதுபோல வொர்த் இல்லாத உங்களை உச்சாணிக் கொம்பில் அமரவைத்ததன் விளைவா இது?
‘வாரிசு’ அரசியலை எதிர்க்கிறேன்பேர்வழி எனக் கூறிக் கொண்டு, காங்கிரசின் அனுசரணையோடு அரியாசனத்தில் அமர்ந்திருக்கிற ரீல்ஸ் ‘மாஸ்டரே’ !
சட்டமன்றத்தில் நீங்கள் திரைப்படம் போல, ‘கத்தி’ எடுத்து சுழற்றி சண்டையிட வேண்டாம்; ‘சர்கார்’ நடத்தும் நீங்கள், எதிர்க்கட்சிகளின் கேள்விகளைப் பொறுப்புணர்வோடு எதிர்கொண்டு பதில் சொல்லி ‘ஜனநாயகனாக’ செயல்பட வேண்டாமா? அதனைவிடுத்து, கேள்விகேட்டாலே, ‘மெர்சல்’ ஆகலாமா? திரையில் மட்டும்தான் ‘புலி’ ஆகப் பாய்வீர்களா? ‘லியோ’ ஆகக் கர்ஜிப்பீர்களா? நிஜத்தில் மூச்சுவிடும் சத்தம்கூட கேட்க மறுக்கிறதே? எங்கே போனது உங்களது ‘பீஸ்ட்’ மோடு? பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா என ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ஆக இருக்கும் பெரும் பெரும் தலைவர்கள் அமர்ந்திருந்த அவையிலே இப்படிப்பட்ட ஒருவரா? எனக் கேட்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டீர்களே? சட்டமன்றத்தில் ‘தெறி’க்க விடுவீர்கள் என உங்களுக்காக ‘பிகில்’ ஊதியவர்களை ஏமாற்றலாமா? ‘தலைவா’ என உங்களை விளித்தவர்களைத் தலைகுனியச் செய்திடலாமா? தமிழ்நாட்டின் மொத்த ‘ஜில்லாக்களையும்’ கட்டியாளும் உயர் பதவியிலிருக்கும் நீங்கள், சட்டமன்றத்தில் இப்படித் தூங்கி வழியலாமா?
மாண்புமிகு மங்குனி முதல்வரே!
நீங்கள் நிகழ்த்திய ‘விசில் புரட்சியே’ போதும். இந்த மௌனப்புரட்சி எல்லாம் வேண்டாம். இனியும் நாடு தாங்காது. கொஞ்சமாவது வாய்திறங்கள்! @CMOTamilnadu
சட்டம் ஒழுங்கு குறித்த கேள்வியை எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் முன்வைக்கிறார்.
அதற்குப் பதில் சொல்ல வேண்டியதோ உள்துறை அமைச்சகத்தைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய். ஆனால், பதில் சொல்வது கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்.
இதில் கூத்து என்னவென்றால், கேள்வியை சட்டமன்ற உறுப்பினர் கேட்டு முடித்ததும், 'அமைச்சர் ராஜ்மோகன் பதில் சொல்வார்' என சபாநாயகரே விஜய்யை அழைப்பதைத் தவிர்க்கிறார். அப்படியென்றால், ஏற்கனவே விஜய்யை எதற்கும் பதில் சொல்ல அழைக்கக்கூடாது எனத் திட்டவட்டமாக முடிவு செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
ஊடகங்களைச் சந்திக்கத் துணிவும் இல்லை; அறிவும் இல்லை. சட்டமன்றத்துலயும் கேள்விக்குப் பதில் பேசத் தெரியாது. பொதுக்கூட்டத்துலயும் எழுதிக் கொடுத்த தாளைப் பாக்கலன்னா பேச வராது.
இப்படி ஒரு மங்குனி முதலமைச்சர வேற எந்த மாநிலத்திலயாவது பாத்திருக்கீங்களா?
10 லட்சம் கோடி கடன்.
-- பாட்டாவே பாடினார் சீமான் அண்ணன்.
இலவசங்களால் தான் இவ்வளவு கடன்.
-- தேர்தல் பிரச்சாரத்தில் இதனால் நான் இலவசம் தரமாட்டேன் என சொன்னார் சீமான் அண்ணன்..
போக்குவரத்து துறையில் 75000 கோடி கடன்.
-- கடனில் துறை இருக்க யார் கேட்டார்கள் இலவச பேருந்து என கேட்டார் சீமான் அண்ணன்.
மின்சாரவாரியத்தில் 2.75 லட்சம் கடன்.
-- இவ்வளவு கடனில் எதற்கு இலவச மின்சாரம் என கேட்டார் சீமான் அண்ணன்.
பிறக்கும் குழந்தை தலையில் 1 லட்சம் கடன் இருக்கிறது.
-- நாமெல்லாம் பிறக்கும் பொழுதே கடனாளிகள் என சொன்னார் சீமான் அண்ணன்.
இதற்கு எதற்கு வெள்ளை அறிக்கை சீமான் அண்ணனின் தேர்தல் பிரச்சார காணொளிகள் பார்த்தாலே தெரியும்.
"தமிழ்நாடு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக உருவெடுத்திருப்பது வேதனையின் உச்சம். என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா? ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா? தமிழ்நாடு முழுவதும் மாறுவேடத்தில் செல்லும் முதல்வர் தடுத்த குற்றங்கள் எத்தனை? எடுத்த நடவடிக்கைகள் எத்தனை? என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக் கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?" - சீமான்
#Seeman | #NTK | #Vijay | #TVK
யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டேனென யாரோ எழுதிக் கொடுத்ததை உணர்ச்சிப்பொங்க மேடையில் ஒப்பிக்கும் முதல்வர் விஜய் அவர்களே! தனது கட்சிப்பெண்ணை வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்றத் துணைபோவதேன்?
தவெகவின் ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் ஒருபுறமென்றால், தவெகவினராலே நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் மறுபுறம்! தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வேனென மேடையில் வீரவசனம் பேசி, தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஆட்சியதிகாரத்திற்கு வந்த முதல்வர் விஜய் அவர்கள் இன்றைக்கு சொந்தக் கட்சியினரிடமிருந்து பெண்களைக் காக்க இயலாத கையறு நிலையிலிருப்பது வெட்கக்கேடானது.
சென்னை, ஆலந்தூரில் கணவனை இழந்தப் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தவெக நிர்வாகி வேம்புலி பாலியல் தொல்லை கொடுத்ததும், சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் ஐம்பதுக்கும் மேற்பட்டப் பெண்களைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி, ஆபாசக் காணொளிகளை எடுத்து அலைபேசியில் வைத்துக் கொண்டு அவர்களை மிரட்டியதும், திருவைகுண்டத்தில் வேலைகேட்டு வந்த பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தவெக நிர்வாகிகளே கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததுமான கொடுஞ்செய்திகள் தவெகவினரால் நிகழும் சமூக அவலங்களுக்கான சரிநிகர் சான்றுகளாகும். இரண்டு பெண் தலைவர்களைக் கொள்கைத் தலைவர்களாகக் கொண்டிருக்கிறோமென மேடைதோறும் சுயதம்பட்டம் அடித்தக் கட்சியின் உண்மையான முகம் இதுதான். பெண்களின் வாக்குகளைப் பெருவாரியாகப் பெற்று, அதிகாரத்திற்கு வந்த தவெகவாலேயே இன்றைக்குப் பெண்களின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகி இருப்பது மிக மோசமான இழிநிலையாகும்.
திருவைகுண்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணை உடனடியாகக் கட்சியைவிட்டு நீக்கிய தவெக, அதில் தொடர்புடைய தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணன் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டேனென யாரோ எழுதிக் கொடுத்ததை உணர்ச்சிப்பொங்க மேடையில் ஒப்பிக்கும் முதல்வர் விஜய் அவர்கள், தனது கட்சிப்பெண்ணை வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்றத் துணைபோவதேன்? நீங்கள் திரையில் செய்த வீரப்பராக்கிரமங்களைத் தரையிலும் செய்வீர்களென்று நம்பி, உங்களை அண்ணனென்றும், தம்பியென்றும் விளித்து உங்களுக்கு வாக்குச் செலுத்திய பெண்களுக்கு நீங்கள் செய்கிற நன்றிக்கடன் இதுதானா? அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் செய்து, கட்சியைவிட்டு வெளியே வரச் செய்த நீங்கள், குற்றமிழைத்த உங்களது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரைப் பதவிவிலகச் செய்து, கட்சியைவிட்டு வெளியேற்ற மட்டும் ஏன் தயங்குகிறீர்கள்? எல்லாவற்றையும்விட ஆட்சியைத் தக்க வைப்பதற்கான ‘பெரும்பான்மை’ கணக்குதான் உங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறதா? ‘எல்லாம் மேலிடத்துக்குத் தெரியும்’ எனக் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அதிகாரத்திமிரில் பேசியிருக்கிறார்களே, யார் அந்த மேலிடம் முதல்வரே? நீங்கள்தான் அந்த மேலிடமா? இல்லை! உங்களுக்கு மேலேயும் ஒரு மேலிடம் இருக்கிறதா? என்னப் பதில் வைத்திருக்கிறீர்கள்?
வழக்கம்போல, ‘பழி போடுகிறார்கள்’ எனப் பொதுமேடையில் ஒப்பாரி வைத்துப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கப் போகிறீர்களா? இல்லை! ‘சிங்கப்பெண் படை’ எனும் பல்லில்லா படையை வைத்துக் காலங்கடத்தப் போகிறீர்களா? குற்றவாளிகளைக் கைதுசெய்யும் அதிகாரமோ, குற்றத்தின் பின்புலத்தைப் புலனாய்வு செய்யும் அதிகாரமோ, விசாரணை செய்யும் அதிகாரமோ என எவ்வித அதிகாரமுமற்று வெறும் ரோந்துப்பணி செய்வதற்கு மட்டும் எதற்கு ஒரு தனிப்படை? 4 கோடி பெண்களின் தொகையைக் கொண்டுள்ள மாநிலத்தில் 5,000 பேரைக் கொண்ட சிங்கப்பெண் படை வெறும் ரோந்துப் பணிகளின் மூலமே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமென்பது ஏமாற்று வாதமில்லையா? ஏற்கனவே, காவல்துறை வைத்திருந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ என்பதற்கும், ‘சிங்கப்பெண்’ படைக்கும் என்ன பெரிய மாறுபாடு? சட்டவிரோதப் போதைப்பொருட்களின் புழக்கத்தைத் தடுக்கவோ, மதுக்கடைகளை முற்றாக மூடவோ, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவோ என எந்த முயற்சியும் எடுக்காதுவிட்டுவிட்டு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவேன்; பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வேன் என மேடையில் வாய்ச்சவடால் விடுவது எதற்கு முதல்வரே? குற்றமிழைக்கும் குற்றவாளிகள் எவராயினும் பாரபட்சமின்றி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள அரசின் தலையாயக் கடமை. அதனை இனியாவது உணர்வீர்களா?
கும்மிடிப்பூண்டியில் வடமாநில தொழிலாளியால் 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை! என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக்கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?
@CMOTamilnadu@TVKVijayHQ
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை வடமாநிலத் தொழிலாளி பிபின் மஞ்சி என்பவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு இதயத்தை நொறுக்குகிறது. பெற்ற குழந்தையைப் பறிகொடுத்து ஈடுசெய்ய முடியாத இழப்பால் தவித்து நிற்கும் பெற்றோருக்கு என்ன வார்த்தைகள் கூறினாலும் அவர்களின் மனதவிப்பை ஆற்றிவிட முடியாது. பஞ்சு போன்ற குழந்தையின் காலில் சிறு முள் குத்தினாலும் தாங்க முடியாத தாய் - தந்தையரின் இழைக்கப்பட்ட இப்பெருங்கொடுமையை எப்படிக் கடந்து வாழப்போகிறதோ என்று எண்ணும்போதே நெஞ்சம் பதறுகிறது.
தமிழ்நாடு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக உருவெடுத்திருப்பது வேதனையின் உச்சம். என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா? ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா? தமிழ்நாடு முழுவதும் மாறுவேடத்தில் செல்லும் முதல்வர் தடுத்த குற்றங்கள் எத்தனை? எடுத்த நடவடிக்கைகள் எத்தனை? என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக் கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?
காவல்துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் பெண்கள் பாதுகாப்பிலும், போதைப்பொருள் ஒழிப்பிலும் அலட்சியம் காட்டுவது பேராபத்தானது. அனைத்துச் சமூகக் குற்றங்களுக்கும் காரணமான போதைப்பொருளை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? வாகனம் ஓட்டி ரீல்ஸ் வெளியிடுவதில் அதீத கவனம் செலுத்தும் தமிழ்நாடு முதல்வர் அவர்கள், போதைப்பொருளை ஒழிப்பதில் அத்தகைய ஆர்வத்தையும், வேகத்தையும் காட்டுவதில்லையே ஏன்? போதை ஒழிப்பை முதலில் தமிழ்நாடு முதலமைச்சர் தன்னுடைய அரசிடமிருந்து தொடங்க வேண்டும். ஊர் முழுக்கப் புதிதாக டாஸ்மாக் பார்களைத் திறந்து வைத்துவிட்டு போதைப்பொருளை ஒழிக்கப்போவதாகத் தவெக அரசு கூறுவது நகைப்புக்குரியது. வெட்கக்கேடானது.
கடந்த திமுக ஆட்சியில் இதேபோன்று கும்மிடிபூண்டியில் 10 வயது சிறுமி பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோதே, அதனை நான் கடுமையாகக் கண்டித்ததோடு, பெண் குழந்தைகள் பாதுகாப்பில் அரசு அதீத கவனம் செலுத்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்துள்ள வடமாநில தொழிலாளிகள் வருகை மற்றும் இருப்பு குறித்து முறையான ஆவணப்பதிவு அவசியம் என்றும், அவர்களின் கட்டுப்பாடற்ற நடமாட்டம் குறித்துத் தொடர் கண்காணிப்பு இன்றியமையாதது என்றும் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அன்றைய திமுக அரசும், இன்றைய தவெக அரசும் வடமாநிலத்தவர் வருகை குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே தற்போதும் வடமாநில தொழிலாளியால் மீண்டும் ஒரு பெண் குழந்தை அநியாயமாக வன்கொடுமைக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளது.
ஏதும் அறியா பெண்குழந்தைகளை வன்கொடுமை செய்யும் ஈவு இரக்கமற்ற கொடூர குற்றவாளிகளுக்கு விரைவான மரண தண்டனை அளிப்பது ஒன்றே, இதுபோன்ற கொடுங்குற்றங்களைத் தடுப்பதற்கு ஒற்றை வழியாகும். அத்தகைய உறுதியும், பெண்கள் மீதான அக்கறையும் இல்லாததாக ஆளுகின்ற அரசுகள் இருக்கும் வரை இதுபோன்ற கொடூர குற்றங்களை ஒழித்திட முடியாது.
ஆகவே, தவெக அரசு இனியாவது வெற்று விளம்பர அரசியல் செய்வதை நிறுத்தி, பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
எவ்வளவு அறிவுப்பூர்வமான விளக்கம் லாரன்ஸ்... உங்க சித்தாந்தத்தில் மக்களை நீங்கள் தெருநாயாக சித்தரிப்பதையும் , பிஸ்கட்டும் பிரியாணியும் போட்டு மக்களை குறைக்கவிடாமல் பார்த்துக்கொள்ளனும் எனக்கூறி ஒரு வாக்காளனின் உணர்வை கேவலப்படுத்தும் உங்கள் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.. மக்களின் எதிர்ப்பு குரல்களுக்கு ஏதாவது போட்டு வாயை மூடவேண்டும் என நீங்கள் சொல்வதில் உங்கள் அரசியல் பயணம் எதை நோக்கி செல்கிறது என புரிந்துவிட்டது.. இதுவரை உங்களிடம் இருந்ததாக கருதப்பட்ட மனிதாபிமானத்தின் மீது சந்தேகம் கொள்ளச்செய்கிறது உங்கள் பேச்சு.. ஆனால் உங்களுக்கும் இந்த மக்கள் ஓட்டு போடுவார்கள்.. கவலை வேண்டாம்..
இப்படிக்கு..
பிஸ்கட்டு பிரியாணிக்காக கையேந்தி நிற்காத மக்களில் ஒருவன்..
அனுமதியற்ற கல்குவாரிகள் அனைத்தையும் மாண்புமிகு கனிவளத்துறை அமைச்சர் மூடியதாக அறிவித்தாரே !
பிறகு எதற்கு கனிவளக்கொள்ளை நடப்பதாக வேலை வெட்டி இல்லாமல் சாலை மறியல் செய்கிறார்கள் ?
என்று யாராவது கேட்டால் அவன் மகேந்திரனாக இருக்கலாம் .
உலக குருதிக்கொடையாளர் நாள் இன்று!
நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறையில் தங்களை இணைத்துக்கொண்டு, உயிர்காக்கும் அவசரத்தேவை எனும்போதெல்லாம் மறுக்காது, இரவு - பகல் பாராது தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஓடோடிச் சென்று தங்கள் குருதியைக் கொடுத்து உயிர் காக்கும் என் அன்பிற்கினிய தம்பி-தங்கைகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகர வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறை கடந்த 16 ஆண்டுகளில் ஏறத்தாழ 4 இலட்சம் அலகுகள் அளவிற்கு குருதியைக் கொடையாக வழங்கி பல்லாயிரக் கணக்கான மக்களின் இன்னுயிரைக் காத்துள்ளது.
கொடையாக நாம் தரும் ஒவ்வொரு துளி குருதியும் உயிர் காக்கும் பேராற்றல் கொண்ட அருமருந்தாகும்! காலத்தினாற் செய்த உதவி ஞாலத்தை விடவும், செய்யாமற் செய்த உதவி வையகத்தையும் - வானகத்தையும் விடவும் பெரிதென்ற நம் வள்ளுவப் பெரும்பாட்டனின் குறளுக்கிணங்க ஒவ்வொரு முறையும் நீங்கள் அளிக்கும் குருதிக்கொடையானது காலத்தினால் செய்த உதவி மட்டுமல்ல; செய்யாமல் செய்த பேருதவியும் கூட!
தன்னலம் சிறிதுமின்றி பிறர் உடல் நலம் பேணவும், பேராபத்தில் உள்ள உயிர் நலம் காக்கவும், தேவை ஏற்படும் போதெல்லாம் குருதியைக் கொடையாக தந்துதவும் குருதிக்கொடையாளர்களின் பெரும்பணி மிகுந்த போற்றுதற்குரியது; வணங்கத்தக்கது! ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் அதிக குருதிக்கொடை வழங்கும் அமைப்பிற்கான பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து நம்முடைய பாசறை உறவுகள் பெறும்போதெல்லாம் மிகுந்த பெருமிதமும் மனநிறைவும் கொள்கிறேன்.
தொடரட்டும் உயிர்காக்க குருதிக் கொடை தரும் உங்கள் உன்னதப் பெருந்தொண்டு!
மலரட்டும் இப்பூவுலகம், பொதுநலம் பேணும் உங்கள் மாசற்ற பேரன்புகொண்டு!
“ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்,
கொடுப்பவர் உள்ளம் உயர்வாகும்,
உன்னத கொடையாம் குருதிக்கொடை!”
என் பேரன்பிற்குரிய குருதிக்கொடையாளர்கள் அனைவருக்கும் உலக குருதிக்கொடையாளர் நாள் நல்வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#WorldBloodDonorDay
அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனையை அனுமதிக்கலாமே? என்று கேள்வி எழுப்பியுள்ள மாண்பமை நீதியரசருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி!
கடந்த ஏப்ரல் மாதம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பனை மரத்திலிருந்து கள் இறக்கிய விவசாயி மணிகண்டன் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கை விசாரித்த மாண்பமை மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதியரசர் புகழேந்தி அவர்கள் புதுச்சேரி, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் கள் விற்பனைக்கு அனுமதி உள்ளபோது, தமிழ்நாட்டில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது ஏன்? எனவும், கேள்வி எழுப்பியதுடன், கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனும்போது, தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அரசு ஏன்
அனுமதி வழங்கக்கூடாது? அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனைக்கு அனுமதிக்கலாமே? என்றும் கருத்துத் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் தருகிறது.
‘கள்’ உணவின் ஒரு பகுதி என்றும், சங்ககாலம் தொட்டே ‘கள்’ தமிழர் பண்பாட்டில் பயன்பாட்டில் உள்ளது என்றும் வலியுறுத்திவரும் நாம் தமிழர் கட்சி, பனை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ‘கள்’ விற்பனைக்குத் தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் போராடி வருகிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் ‘கள்ளின் மருத்துவப் பயன் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ள மாண்பமை நீதியரசர் புகழேந்தி அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் கள் விற்பனையை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று போராடிவரும் பனை தொழிலாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நெடுங்காலக் கோரிக்கை விரைவில் நிறைவேறட்டும்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி