உங்கள் கடற்கரையில் புதைக்க விட்டதே பெரிய விஷயம்...
நீ பேனா வை... ஒரு நாள் நான் வந்து அதை உடைப்பேன் - அண்ணன் #சீமான்
அண்ணன் பேச்சு #வெறித்தனம்#கடலில்பேனா_வேண்டாம்
பொலிவியா, அர்ஜென்டினாவில் நீர்வளத்தைச் சூறையாடி, அம்மக்களின் போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவார்ப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத சனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக் கடமையுமாகும்.
கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் அவர்கள் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்குத் தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் இலாபத் தேவைக்குத்தான் வேலைசெய்வார்களே ஒழிய, மக்கள் சேவைக்கு ஒருநாளும் வேலை செய்ய மாட்டார்கள் எனும் அடிப்படைப் புரியாதா? நீர்வளத்தையும், நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளித்தால், நீர் இறையாண்மை முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அவர்கள் சொல்கிற விலைக்குக் குடிநீரை மக்கள் வாங்க வேண்டியப் பேராபத்துமிக்க சூழல் நாளை உருவாகும். இது வருங்காலத் தலைமுறையின் நலவாழ்வினைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அடமானம் வைக்கும் பேரபாயம். அர்ஜென்டினாவிலும், பொலிவியாவிலும் சூயஸ் நிறுவனம் செய்த மானுடகுலக் கொடுமைகள் வரலாறாக விரிகையில், கண்முன்னே சாட்சியாக இருக்கையில், அந்நிறுவனத்திடமே சேலம் மாநகரத்தின் நீர்விநியோகத்தை வழங்குவது மக்கள் விரோதப்போக்கின் உச்சமாகும்.
ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
மறைந்த ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களின் திருவுடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே காட்ரோட் பகுதியில் உள்ள அப்பாவின் பண்ணை வீட்டில் இன்று 09-07-2026 நடைபெற்ற 30ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வில் குடும்பத்தினருடன் பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தினேன்.
கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை என்பதை கரூர் இடைத்தேர்தலை மனதிற்கொண்டு செய்வதா? வாக்குவேட்டைக்காக மலினமான அரசியல் செய்யலாமா?
@CMOTamilnadu@TVKVijayHQ
தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், 50 நாட்கள்வரை கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்காத முதல்வர் விஜய் அவர்கள், அதிமுகவைச் சேர்ந்த சட்டமன் உறுப்பினர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பதவி விலகி, தவெகவில் சேர்ந்ததையடுத்து, உடனடியாக கரூருக்குச் செல்ல முற்படுவதும், மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கத் திட்டமிடுவதும் மலினமான வாக்கரசியலாகும். கரூரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 35 இலட்சம்வரை துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது அரசு வேலை என அறிவிப்பது இடைத்தேர்தலுக்காகச் செய்யப்படும் அற்பத்தனமாகும்.
கரூரில் நடைபெற்ற தவெகவின் பரப்புரைக்கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என 41 பேர் மரணித்தது ஏற்கவே முடியாத பேரவலம். சமகாலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய துயரம். வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி. அதில் உறவுகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டியது தார்மீகக் கடமை. அது முழுமையாக வழங்கப்பட்டுவிட்டப் பிறகு, கரூர் இடைத்தேர்தலுக்காக அரசு வேலை என அறிவிப்பது மிகத் தவறான முன்னுதாரணமாகும். அதனை ஒருபோதும் ஏற்க முடியாது. அரசு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு, வேலைக்காக பல இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்குரிய வேலைவாய்ப்பினைத் தராது, இடைத்தேர்தல் அரசியல் இலாபத்துக்காக அரசு வேலையைத் தாரைவார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நாட்டின் பாதுகாப்புக்காக எல்லையில் நின்று உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கோ, சுகாதாரத்தைப் பேணிகாக்க தூய்மைப்பணியாளர்களாகப் பணிசெய்து, நச்சு வாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கோ, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று, சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கோ கிடைக்காத அரசுப்பணி, திரைக்கவர்ச்சிக்குப் பலியானவர்களின் குடும்பத்தினருக்குக் கிடைக்குமென்றால், இது எந்தவிதத்தில் சரியானது?
கரூரில் உயிரிழந்த 41 பேரின் மரணத்திற்கு தவெகவும், இன்றைக்கு முதல்வர் விஜய்யும்தான் முழுமுதற் காரணம் என்பதை நாடறியும். ஆனால், இந்தநொடிவரை அந்த மரணங்களுக்கு எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது, தன் மீது பழிபோடுவதாகச் சொல்லி, அரசியல் செய்து வருவது மிகக் கீழ்த்தரமானது. அதனைத் தாண்டி, கரூர் இடைத்தேர்தலுக்காக அப்பேரவலத்தைப் பயன்படுத்தி வாக்கு வேட்டையாட முனைவது குரூரத்தின் உச்சம். கரூரில் உயிரிழப்புகள் நிகழ்ந்தபோது களத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்காது, விரைந்து வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்தவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர்களுடைய வீட்டுக்குச் சென்று பார்க்காது, ஒரு மாதம் கழித்து மாமல்லபுரத்திலுள்ள விடுதிக்கு அழைத்துப் பார்த்தவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மீது இப்போது கொள்ளும் பரிவெல்லாம் இடைத்தேர்தலை மனதிற்கொண்டே நடக்கும் கேலிக்கூத்து. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திப்பதிலும், அவர்களுக்கு அரசு வேலை வழங்குவதிலும் பொதிந்திருப்பது மனிதநேயமோ, தார்மீக உணர்வோ இல்லை; முழுக்க முழுக்க அரசியல் இலாப நட்டக்கணக்குதான்! உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே ஒன்றிய, மாநில அரசுகளின் சார்பில் கடந்த காலத்தில் துயர்துடைப்பு நிதி வழங்கப்பட்டுவிட்ட நிலையில், கூடுதலாக அவர்களுக்கு உதவ விரும்பினால் அதனை தவெகவின் சார்பாகவோ, முதல்வர் விஜய் தனிப்பட்ட முறையிலோ செய்யட்டும். அதனைவிடுத்து, அரசு வேலை என்பதனை இடைத்தேர்தலுக்கான கேடயமாகப் பயன்படுத்துவது முறையானதல்ல.
அரசு வேலைக்காக இரவு பகலாகப் படித்துவிட்டு, இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். தகுதித் தேர்வு எழுதிவிட்டு இன்றளவும் பணி ஆணை கிடைக்காமல் ஆசிரியர் பெருமக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பல ஆண்டுகள் பணி செய்துவிட்டு முறையான ஓய்வூதியம் கிடைக்காமல் அரசு ஊழியர்கள் தவித்து வருகின்றனர். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பல்லாயிரம் செவிலியர்களும், ஆசிரியர்களும், கௌரவ விரிவுரையாளர்களும், டாஸ்மாக் ஊழியர்களும், மின்துறை மற்றும் போக்குவரத்துப் பணியாளர்களும், தூய்மைப்பணியாளர்களும் பணி நிரந்தரம் கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத தவெக அரசு, இடைத்தேர்தலை நோக்கமாகக் கொண்டு கரூரில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்குவது மிகத் தவறானப் போக்காகும்.
ஆகவே, கரூர் இடைத்தேர்தலில் தன் அரசியல் இலாபத்தை நோக்கமாகக் கொண்டு, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் தவறான முடிவைக் கைவிட வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#WATCH | புதுச்சேரி பட்டானூரில் நடந்த இயக்குனர் கவுதமன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
#SunNews | #MKStalin | #Seeman | #Puducherry
ஒரே சோபாவில் அமர்ந்து சீரியஸாக பேசிக்கொண்டிருந்த மு.க.ஸ்டாலின், சீமான்...... மேடையில் போட்டோ எடுக்கும் போது சீமானை அழைத்து சத்யராஜ் அருகே நிற்க சொன்ன கெளதமன்...
புதுச்சேரியில் நடைபெற்ற இயக்குனர் கெளதமன் இல்லத்திருமண விழாவில் அரசியல் தலைவர்கள் பங்கேற்று அன்பை பரிமாறிக்கொண்ட காட்சி..!
#Puducherry | #Seeman | #MKStalin | #Vaiko | #Function | #PolimerNews
தமிழ்நாட்டுச் சட்டமன்றம்!
நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட பேரவை! தமிழ்நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் தலைமைக்கூடம்! மாண்புமிகு பிரதிநிதிகள் மக்களுக்காக முழக்கமிடும் மாமன்றம்!
பெருந்தலைவர் காமராசரும், பேரறிஞர் அண்ணாவும், பேராசான் ஜீவானந்தமும், கண்ணியமிகு காயிதே மில்லத்தும், நாவலர் நெடுஞ்செழியனும், பெருமகன் சங்கரய்யாவுமென பெரும் பெரும் தலைவர்களும், அறிஞர்களும், ஆளுமைகளும், மேதைகளும் உரையாற்றிய மகத்தான மன்றமிது.
இங்குதான் அரும்பெருந்தலைவர்கள் சமூக மாற்றத்துக்கான வாதப் பிரதிவாதங்களை எடுத்து வைத்தார்கள்; மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் போட்டிப் போட்டுக் கொண்டு விவாதித்தார்கள்; சமூக அவலங்களை நாடறிய எடுத்துரைத்தார்கள்; கடைக்கோடி மக்களின் கனவுகளை ஈடேற்றத் திட்டங்களையும், சட்டங்களையும் தீட்டினார்கள்.
எப்பேர்ப்பட்ட அவை? எப்படிப்பட்ட ஆளுமைகள் உரையாற்றிய இடம்? எப்படிப்பட்ட தலைவர்களைக் கண்ட மன்றம்? அதனை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள் ஆச்சர்யக்குறி ஆட்சியாளர்?
‘ஒரு கோமாளி அரண்மனைக்குச் சென்றால் அவன் அரசனாகி விடுவதில்லை, அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாகிவிடும்’ என்கிறது துருக்கியப் பழமொழி. அதனை தமிழ்நாட்டில் மெய்ப்பித்துக் காட்டிய பெருமை முதல்வர் விஜய்யையே சாரும்.
சட்டமன்றத்துக்கென்று ஒரு கண்ணியம் இருக்கிறது; சட்டமன்றத்தில் இருப்பவர்களுக்கென்று ஒரு பொறுப்புணர்வு இருக்கிறது. முதலமைச்சர் பதவிக்கென்று ஒரு மாண்பு இருக்கிறது. அமைச்சர் பெருமக்களுக்கென்று ஒரு மரபு இருக்கிறது. அவை யாவற்றையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கைகொட்டிச் சிரித்து, விசிலடிக்கும் பொழுதுபோக்குக் கூடாரமாக சட்டமன்றத்தை மாற்றி, சந்திச் சிரிக்க வைத்திருக்கிறார் முன்னாள் நடிகரும், இந்நாள் முதல்வருமான விஜய்.
திரைப்படங்களில் நடிப்பதைவிட்டவர், நடிப்பதை மட்டும் ஏனோ விட மறுக்கிறார்? சபாநாயகரை இயக்குநராகவும், அமைச்சர்களை துணை நடிகர்களாவும் நினைத்து, சட்டசபையை நாடகசபா ஆக்கியிருக்கிறார்.
நான்கு நாட்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரில், மூன்று நாட்கள் மௌனவிரதம்; இல்லை! இல்லை! மௌனப் புரட்சி! தனக்கு இன்றைக்கு, ‘Scene இல்லை’ என்று நினைத்தாரோ என்னவோ, கால்கள் மரத்து போனாலும் சரி! மறந்தும், எந்திரிக்க மாட்டேன்; ‘எந்திரித்தால் பேசச் சொல்லிவிடுவார்கள்’ என மந்திரித்துவிட்டவர் போல, சபையை வெறித்துப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தார்.
சட்டமன்றத்தில் முன்வைக்கப்படும் எல்லா அமைச்சகங்கள் குறித்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லக் கடமையும், உரிமையும் கொண்ட தலைமை நிர்வாகிதான் முதல் அமைச்சர். தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகள் மட்டுமல்லாது, மற்ற துறைகள் தொடர்பான கேள்விகளுக்கும் முதல்வரே பதில் சொல்லலாம். அதற்கான எல்லா உரிமையும் அவருக்குண்டு. ஆனால், ‘வாய்ல நல்லா வந்துரும்’ என்று வாயில் வருவதற்கும் எழுதிக் கொடுக்க வேண்டிய பரிதாப நிலையிலிருக்கும் முதல்வரிடம் போய், அதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? தர்க்க ஆற்றல், சமயோசிதத்திறன் எல்லாம் பனையூரிலிருந்து பல கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால்தானே ஊடகங்களைக் கண்டாலே உதறல் எடுத்து, ‘மெர்சல்’ ஆகிறார் மாண்புமிகு ‘மக்கு’ முதல்வர். இதனால், முதல்வரின் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில்சொல்கிறேன் பேர்வழியென அரைவேக்காடு அமைச்சர்கள் கிளம்பி வாய்க்கு வந்ததை அடித்துவிட, சபாநாயகரே அவைக்குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிடும் அளவுக்கு விபரீதமாகிப் போனது சபையின் நிலை.
கூட்டத் தொடரின் கடைசி நாளில் முதல்வர் பதில் சொல்வார் என முந்தைய நாட்களிலேயே அறிவித்துவிட, கேள்விகளும், விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் முன்பே வைக்கப்பட்டுவிட வசதியாய் போனது ஆளுமையே இல்லாத ஆளுங்கட்சிக்கு. பதில்களை எல்லாம் பல பக்கத் தாள்களில் எழுதிக் கொடுத்துவிட, அதனை அள்ளிக் கொண்டு வந்து, அள்ளி அளந்து வாசித்தார் ஆச்சர்யக்குறி ஆட்சியாளர்.
அதிலாவது ஏதாவது உருப்படியாக, ஆக்கப்பூர்வமாகப் பேசினாரா? இல்லை!
தவெக ஆட்சிப் பொறுப்பேற்று அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் ஒன்றரை மாதத்தில் ஓராயிரம் சட்டம் ஒழுங்குச் சிக்கல்கள். கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, வன்முறை என சமூக அமைதி சகட்டுமேனிக்கு சிதைக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பொறுப்பேற்று, சிக்கலின் வேர் முதல் தீர்வுவரை எதுகுறித்தாவது உருப்படியாகப் பேசினாரா? இல்லை!
மின்வெட்டு பூதாகரப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. இப்போதுவரை பிரச்சினைத் தீர்ந்தபாடில்லை. உழைத்துக் களைத்த மக்கள் இரவில் ஓய்வெடுக்க முடியாது, வீதிக்கு வந்து போராடுகிறார்கள். வெப்பத்தால் அழும் குழந்தைகளை ஆசுவாசப்படுத்த முடியாது நள்ளிரவில் பெற்றோர்கள் புலம்பித் தவிக்கிறார்கள். எதனால் மின்வெட்டு? நியாயமானக் காரணத்தைச் சொல்ல முடிந்ததா? அமைச்சர் ஒரு பதில்! அதிகாரிகள் ஒரு பதில்! இப்போது முதல்வராவது பிரச்சினையைத் தெளிவுப்படுத்தினாரா? இல்லை!
நீட் தேர்வினால் இறந்த தங்கை அனிதாவைக் குறிப்பிட்டு, தன்னுடைய உடன்பிறந்த தங்கை வித்யா மரணம் அளவுக்குப் பாதித்ததாக விக்கிரவாண்டி மாநாட்டிலேயே மனமுருகினார் இன்றைய முதல்வர் விஜய். அணுகீர்த்தனா, கோபிகா, ரோஷினி, வெற்றியானந்தம் என 10 நாட்களுக்குள் நான்கு பிஞ்சுகள் கருகியிருக்கின்றன. அவர்களுக்கு இரங்கல் கூறவாவது வாய்திறந்தாரா? அவர்கள் இறந்தது தெரிந்தாவது மனமிரங்கினாரா? இல்லை!
பெரியப்பாளையம் அருகே, கன்னிகைப்பேரில் 9 பெண்கள் அமோனியா கசிவால் உயிரிழந்திருக்கிறார்கள். 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். செய்தியைக் கேட்டதும் பதறித் துடித்து நேரில் செல்லத்தான் மனமில்லை. அவர்களது குடும்பத்தினருக்கு உரிய துயர்துடைப்புத்தொகை அளிக்கப் பணமுமா இல்லை? சுயவிளம்பரத்துக்காக காசைக் கரியாக்கும் முதல்வருக்கு இறந்துபோன தொழிலாளர்கள் மீது கரிசனம் வந்ததா? இல்லை!
‘விவசாயியாக அடுத்தப் பிறவியில் பிறக்க வேண்டும்’ எனப் பரப்புரைக் கூட்டத்தில் அள்ளி அளந்துவிட்டுவிட்டு, இப்போது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பயிர்க்கடனைக்கூட தள்ளுபடி செய்யாது தட்டிக் கழித்து, விவசாயிகளை வேதனையின் விளிம்பில் தள்ளுகிறார் முதல்வர் விஜய். போதாதென்று, எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டுத்தான் விவசாயிகள் போராடுவதாகக் கொச்சைப்படுத்தவும் செய்கிறார். அவர்களுக்கான உரிய தீர்வும், நீதியும் கிடைக்கச் செய்தாரா? இல்லை!
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டத் துடிக்கிறது கர்நாடகா. அதனை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமெனத் தீர்மானம் இயற்றுகிறார் முதல்வர் விஜய். நடுவர் மன்றம் என்பது நயவஞ்சக முடிவெனத் தனக்குத் தெரியவில்லை என்றால், எழுதித் தருபவரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டாமா? சுயபுத்திதான் இல்லையென்றால், சொல்புத்திகூடவா இல்லை? கர்நாடகத்தின் அடாவடித்தனத்தை எதிர்த்துப் போரிட போர்க்குணம்தான் இல்லை; சட்டமன்றத்தில் ஒழுங்காக ஒரு தீர்மானம் இயற்றவாவது திறன் இருந்ததா? இல்லை!
மொத்தத்தில், முதல்வரின் பேச்சில் சுரத்தும் இல்லை; சரக்கும் இல்லை. முதல்வரைக் குறைசொல்வதா? எழுதிக் கொடுத்தவரைத் திட்டித் தீர்ப்பதா என இரட்டைக்குழப்பம்!
முதல்வரின் உரையில்,
சமகால மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் இல்லை. ஆனால், ‘Theme Music’ போடும் அளவுக்கு வசனங்களுக்குக் குறைவில்லாது இருந்தது.
மாநில உரிமைகள் சார்ந்த பொறுப்புணர்வுக்குரல் இல்லை; ஆனால், பொறிபறக்கும் அளவுக்கு ‘Herioc Mannerism ’ இருந்தது.
விமர்சனங்களுக்கு உரிய விளக்கம் இல்லை; ஆனால், வில்லனைத் மிரட்டும் கதாநாயகனின் ‘Body Language’ இருந்தது.
கேள்விகளுக்கு உரிய பதில்கள் இல்லை; ஆனால், ‘Catchy’ வார்த்தைகள் மட்டும் உரை முழுமைக்கும் விரவிக் கிடந்தது.
ஆக்கப்பூர்வக் கருத்துகள் இல்லை; ‘Audience Engaging’ அம்சங்கள் அளவில்லாது இருந்தது.
மொத்தத்தில், .OTTயில் ஓசியில் படம் போட்டதுபோல, பேரவையை நேரலையில் ஆக்கியிருக்கிறார் வரலாறு கண்டிராத விசித்திர முதல்வர்!
‘வெட்டிக்கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறாரே’ என்று நினைத்தால், கடைசியில் குட்டிக்கதை வேறு! அதுசரி! ‘Vulgar warriors ’ Goosebumbs ஆகவும், Fire விட்டு Reels போடவும் ‘Content’ தேற்ற வேண்டாமா?
‘அப்பாவைக் காணும்’ என்று யாரையோ தேடுகிறார். அதுசரி! உங்கள் கதையில் அப்பாவைக் காணாதது போல, சபையில் உங்களிடம் ஆளுமை என்பதையே காண முடியவில்லையே, ஏன் முதல்வரே? சொந்தத் துறையைச் சார்ந்தக் கேள்விகளுக்கும் சொந்தமாகப் பதில் சொல்ல வக்கற்று நிற்கிறீர்களே? தமிழ்நாட்டுச் சட்டமன்றம் காணாத கந்தர்வக்கோலமாக அல்லவா இருக்கிறது! யாரோ எழுதிக் கொடுத்ததை ஏற்ற இறக்கமாக வாசித்து, உடல்மொழி காட்டுவதில் மட்டும்தானே வீரம் இருக்கிறது உங்களிடம்! மற்றபடி, ‘ A4 Paper’ இல்லையென்றால், முதல்வரே! நீங்களே Waste Paperதானே!
ஆளுவதென்பது குற்றமில்லை; ஆளுமையே இல்லாதிருப்பதுதான் குற்றம்!
அறியாமை குற்றமில்லை; அறிந்துகொள்ள நினையாமைதான் குற்றம்!
எழுதிக் கொடுத்ததைப் பார்த்துப் பேசுவதுப் குற்றமில்லை; எழுதிக் கொடுத்தால் மட்டும்தான் பேசுவேன் என்பதுதான் குற்றம்!
புரிந்துகொள்ளுங்கள் முதல்வரே! கொஞ்சமாவது திருந்திச் செயல்படுங்கள். ஆட்சியைப் பிடிக்க Reels போட்டிருக்கலாம். ஆட்சியைப் பிடித்தப் பிறகும், Reels மட்டுமே போட்டுக் கொண்டிருந்தால் நல்லாவா இருக்கு?
ஆச்சர்யக்குறி ஆட்சியாளரே! மாண்புமிகு ‘மக்கு’ முதல்வரே!
‘சுறா’ படத்தையும் ‘Super’ எனும் சொல்லுமளவுக்கு உங்களுக்கு ரசிகர்கள் இருக்கலாம். ஆனால், சுமாருக்குக் கீழான உங்களது படுபாதக ஆட்சியையும் ‘Blockbuster’ எனப் பாராட்டுமளவுக்கு தமிழ் மக்கள் ரசிக மனப்பான்மையிலேயே மூழ்கிக் கிடக்க மாட்டார்கள் என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள்!
ஐயா பெ.மணியரசன் தலைமையில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தீர்மான நகலெரிப்புப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் பங்கேற்கிறது.
- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பேரறிவிப்பு
தமிழ்நாட்டு அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது ஏற்கனவே இருக்கும் விதிகளின்படியே சட்ட விரோதம்தான் எனும்போது புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால் சிக்கலை மேலும் நீட்டிக்கவும், இன்னும் பல காலம் அதனை இழுத்துக்கொண்டே போகவும் வழிவகை செய்திடும். ஒருவேளை, அந்நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்குமானால் சட்டப்பூர்வமாக இருக்கும் கடைசி வாய்ப்பையும் தமிழ்நாடு இழக்க நேரிடும்.
நடுவர் மன்றம் கோரி இயற்றப்பட்ட இத்தீர்மானம் முழுக்க முழுக்க தமிழின விரோதமாகும். அதனைக் கண்டித்து வரும் 27.06.2026 அன்று தஞ்சாவூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தீர்மான நகலெரிப்புப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் பங்கேற்கிறது எனப் பேரறிவிப்புச் செய்கிறேன்.
#TVK #CMVijay #MekedatuDam #Karnataka #Tamilnadu #NaamTamilar #Seeman #NTK #CauveryRiverRights #TNAssembly #TnGovt
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வருமான விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
உங்களுடைய பொதுவாழ்க்கைக்கானச் செயல்பாடுகளும், அரசியல் பணிகளும் சிறக்கட்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
தேனி வத்தலக்குண்டு காட்ரோடு பண்ணையில் வைக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்! #பாரதிராஜா
தமிழீழ தாயக விடுதலைப் போராட்டத்தில் தொடக்க நாள் முதல் தன் வாழ்நாளின் இறுதி நொடிவரை அந்த விடுதலைக் களத்தை விட்டு சற்றும் விலகாத தமிழ்த்தேசிய விடுதலைப் போராளி!
தன்னுடைய எழுச்சி மிகுந்த குரலால் இன உணர்வும், மான உணர்வும் ஊட்டி தமிழினப் பிள்ளைகளை எழுப்பிய பாசறைப்பாணர்!
மாமனிதர்!
நம்முடைய அப்பா தேனிசை செல்லப்பா அவர்களினுடைய நினைவேந்தல் நிகழ்வு.
வைகாசி 23 | 06-06-2026
இடம்: தியாகராயர் அரங்கம், தியாகராயர் நகர் - சென்னை.
புகழ்வணக்க உரை: https://t.co/pchqBTIbtS
தம்பி மாரிதாஸ் மீதான தவெக அரசின் கைது நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கல்! அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்தும் பாசிசப்போக்கு!
@CMOTamilnadu@TVKVijayHQ
ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான தம்பி மாரிதாஸ் அவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தொடர்ச்சியாகத் தோலுரித்து வரும் மாரிதாசைக் கைதுசெய்திருப்பது அதிகாரத் திமிரின் உச்சமாகும்.
தம்பி மாரிதாசின் கருத்துகள் அவதூறானவை எனக் கருதினால் சட்டப்படியாக வழக்குத் தொடுக்கலாம்; மாறாக, எவ்வித விசாரணையும் இன்றி உடனடி கைது நடவடிக்கை என்பது சனநாயக விரோதமாகும். பட்டப்பகலில் படுகொலை செய்வோர், பாலியல் வன்கொடுமை செய்வோர், போதைப்பொருட்கள் விற்பனை செய்கின்ற கொடுங்குற்றவாளிகள் மீதெல்லாம் பாயாத அதிரடி கைது நடவடிக்கைகள், அரசை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் பாய்கிறது என்றால் இந்த அரசும் அதிகாரமும் யாருக்கானது? இதுதான் மக்கள் வேண்டிய மாற்றமா? ஆளும் தவெகவைச் சேர்ந்தவர்கள் மாற்றுக்கட்சியினரையும், அரசை விமர்சிப்போரையும் தனிநபர் தாக்குதல் தொடுத்து, இணையவெளியில் அவதூறுகளையும், ஆபாசத்தையும் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடும் நிலையில், அவர்கள் மீதெல்லாம் பாயாத சட்டம் தம்பி மாரிதாஸ் மீது பாய்கிறதென்றால், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் போக்காகும். தவெகவை மற்றவர்கள் விமர்சிப்பதை கவனிக்கும் காவல்துறை, தவெகவினர் மற்றவர்களை விமர்சிப்பதை கண்டுகொள்ளாதது ஏன்?
திருச்சியில் பேசிய முதல்வர் விஜய், ‘என்னை விமர்சிப்பவர்கள் நிறுத்திவிட வேண்டாம், தொடர்ந்து விமர்சியுங்கள்’ என்று மேடையில் வீரவசனம் பேசிவிட்டு, இப்போது அற்ப விமர்சனத்திற்கு அதிரடி கைது நடவடிக்கை எடுப்பதற்கு பெயரென்ன? முந்தைய திமுக அரசு செய்த கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் அதே கொடுஞ்செயலை தவெக அரசும் தொடர்வதற்கு பெயர்தான் தூய சக்தியா? வெட்கக்கேடு! ஆளும் அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்த முனையும் இத்தகைய மிரட்டல்கள் அப்பட்டமான பாசிசப்போக்காகும். பந்து எப்போதுமே ஒருவரிடம் மட்டுமே இருந்துவிடுவதில்லை. இன்று உங்கள் கைகளில் இருக்கும் பந்து நாளை மற்றவர்கள் கைகளுக்கும் இடம்மாறும்; பார்த்து விளையாடுங்கள்.
ஆகவே, தவெக அரசு பழிவாங்கும் போக்கோடு நடந்துகொள்ளாமல் சனநாயகத் தன்மையோடு இயங்க வேண்டுமெனவும், தம்பி மாரிதாசை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
#ReleaseMaridhas
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஊடகத்தை மதிக்காத ஒருவரை ஊடகங்கள் எப்போதும் செய்தியாக்குகின்றன
நாம் மான்போடடு மதித்தால் நம்மை அவர்கள் மதிப்பதில்லை!
இதுதான் ஊடக தீண்டாமை!
செந்தமிழன் சீமான்
#சீமான்#ntk#ntkitwing#seeman#tamilnationalism
எரிகாற்று உருளை விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்!
வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிகாற்று உருளையின் விலையை இந்திய ஒன்றிய அரசு 29 ரூபாய் அளவிற்கு அதிகரித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. எவ்வித முன்னறிவிப்புமின்றி எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தியுள்ளது ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கட்டுக்கடங்காது நாளுக்கு நாள் உயர்வதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் மக்கள் செய்வதறியாது தவித்து நிற்கையில், எரிகாற்று உருளை விலையையும் உயர்த்துவது, இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான குடும்பங்களின் குருதியை உறிஞ்சும் கொடுஞ்செயலாகும்.
இந்திய ஒன்றிய அரசின் கையிலிருந்த வாகன எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை தனியார் எரிஎண்ணெய் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் வகையில், கடந்த 2010ஆம் ஆண்டு சூன் மாதம் பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை காங்கிரசு அரசும், 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டீசல் விலை நிர்ணய உரிமையை பாஜக அரசும் மொத்தமாகக் கையளித்ததன் விளைவே தற்போது மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கு அடிப்படை காரணமாகும்.
1200 ரூபாய் அளவிற்கு விற்ற சமையல் எரிகாற்று உருளையின் விலை கடந்த நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டுதான் 1000 ரூபாய்க்கு கீழாக குறைக்கப்பட்டது. தற்போது அதனை மீண்டும் 1000 ரூபாய் அளவிற்கு உயர்த்தும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் மாதந்தோறும் பாதிக்கும் அறமற்றச் செயலாகும்.
ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு எரிகாற்று உருளை விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும், எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் இந்திய ஒன்றிய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
இத்தகைய நெருக்கடியானச் சூழலில் எரிகாற்று உருளை விலை உயர்வால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படாமல் காக்க, தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு, உடனடியாக தான் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து குடும்பங்களுக்கும் வருடத்திற்கு 6 எரிகாற்று உருளைக்கான செலவை முழுமையாக ஏற்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாட்டின் இளம் சதுரங்க வீரர் அன்புமகன் பிரக்ஞானந்தா அவர்கள் நார்வே சதுரங்க தொடர் - 2026 வாகையர் பட்டத்தை வென்று தமிழ் மண்ணிற்கும், மக்களுக்கும் அளப்பரிய பெருமை சேர்த்துள்ளதை அறிந்து பெருமிதமும், பேருவகையும் அடைந்தேன்.
உலகின் முன்னணி சதுரங்க வீரர்களையெல்லாம் வீழ்த்தி இந்தியப் பெருநாட்டிலேயே முதன்முறையாக நார்வே சதுரங்கப் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ள பிரக்ஞானந்தா, சதுரங்க ஆட்டத்தில் தமக்குள்ள அளப்பரிய தனித்திறன் மூலம் உலக வாகையர் பட்டத்தை வெல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.
வருங்காலங்களில் மேலும் பல பன்னாட்டு சதுரங்கப் பட்டங்களை வென்று, உலகின் முதல்நிலை சதுரங்க வீரராகத் திகழ அன்புமகன் பிரக்ஞானந்தாவிற்கு என்னுடைய பேரன்பும், வாழ்த்துகளும்!
@rpraggnachess
The Hindu YouTube Channel has exposed Vijay’s TVK’s narrative setting fraudulent activities to cheat the people of Tamilnadu. Link to video below!
விஜயின் தவெக-வின் தேர்தல் பொய் கருத்துருவாக்கத்தைத் தோலுரித்துள்ளது The Hindu வலையொளி.
காணொலியல் இருந்து: சமூக வலைத்தளங்களில் தவெக சார்பில் பொதுத்தொகுதியில் 28 தலித் MLAக்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டதாகப் பரப்பப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் அறிக்கைப்படி, உண்மையில், தவெக பொதுத்தொகுதயில் ஒரு SC வேட்பாளரை மட்டுமே நிறுத்தியது, அவர் வெற்றி பெறவில்லை. இக்கருத்துக்கு மாற்றாக, நிறைய பொதுத்தொகுதியில் SC வகுப்பினரை வேட்பாளர்களாக நிறுத்தியது நாம் தமிழர் கட்சி மட்டுமே ஆகும்.
இது ஒரு எடுத்துக்காட்டு. இது போன்று தவெக சார்பில் தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட பல்வேறு பித்தலாட்டக் கருத்துருவாக்கங்களை இக்காணொலி அலசுகிறது.
முழுக் காணொலி இணைப்பு: https://t.co/J40owVGXsD
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த செய்தியாளரும், நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளருமான அன்புத்தம்பி ஹாஜா முகைதீன் அவர்கள் தனது வீட்டின் வாசலிலேயே போதைக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். தம்பிக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, முழு உடல்நலம் பெற்று மீண்டுவர துணைநிற்கிறேன்.
போதைப்பொருட்களின் விற்பனைக்கு எதிராக நிற்கும் ஒரு ஊடகவியலாளருக்கே இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, வன்முறைத்தாக்குதல் தொடுக்கப்படுகிறதென்றால், எளிய மக்களின் நிலை என்னவாக இருக்கும்? நாள்தோறும் போதைக்கும்பலின் அட்டூழியமும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. திமுகவின் ஆட்சியில் நிகழ்ந்த கொடுமைகள்தான் தொடருமென்றால், நடப்பது தவெகவின் ஆட்சியா? இல்லை! திமுகவின் ஆட்சியா? இதுதான் மாற்று அரசியலா? முதல்வராகப் பதவியேற்றதும், ‘போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு அதிரடிப்படை அமைப்பு’ எனக் கையெழுத்திட்டாரே விஜய், என்ன செய்கிறது அந்தப் படை?
@CMOTamilnadu@TVKVijayHQ
இக்கொடூரத் தாக்குதல் நடத்தியவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி