பொலிவியா, அர்ஜென்டினாவில் நீர்வளத்தைச் சூறையாடி, அம்மக்களின் போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவார்ப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத சனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக் கடமையுமாகும்.
கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் அவர்கள் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்குத் தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் இலாபத் தேவைக்குத்தான் வேலைசெய்வார்களே ஒழிய, மக்கள் சேவைக்கு ஒருநாளும் வேலை செய்ய மாட்டார்கள் எனும் அடிப்படைப் புரியாதா? நீர்வளத்தையும், நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளித்தால், நீர் இறையாண்மை முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அவர்கள் சொல்கிற விலைக்குக் குடிநீரை மக்கள் வாங்க வேண்டியப் பேராபத்துமிக்க சூழல் நாளை உருவாகும். இது வருங்காலத் தலைமுறையின் நலவாழ்வினைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அடமானம் வைக்கும் பேரபாயம். அர்ஜென்டினாவிலும், பொலிவியாவிலும் சூயஸ் நிறுவனம் செய்த மானுடகுலக் கொடுமைகள் வரலாறாக விரிகையில், கண்முன்னே சாட்சியாக இருக்கையில், அந்நிறுவனத்திடமே சேலம் மாநகரத்தின் நீர்விநியோகத்தை வழங்குவது மக்கள் விரோதப்போக்கின் உச்சமாகும்.
ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை என்பதை கரூர் இடைத்தேர்தலை மனதிற்கொண்டு செய்வதா? வாக்குவேட்டைக்காக மலினமான அரசியல் செய்யலாமா?
@CMOTamilnadu@TVKVijayHQ
தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், 50 நாட்கள்வரை கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்காத முதல்வர் விஜய் அவர்கள், அதிமுகவைச் சேர்ந்த சட்டமன் உறுப்பினர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பதவி விலகி, தவெகவில் சேர்ந்ததையடுத்து, உடனடியாக கரூருக்குச் செல்ல முற்படுவதும், மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கத் திட்டமிடுவதும் மலினமான வாக்கரசியலாகும். கரூரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 35 இலட்சம்வரை துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது அரசு வேலை என அறிவிப்பது இடைத்தேர்தலுக்காகச் செய்யப்படும் அற்பத்தனமாகும்.
கரூரில் நடைபெற்ற தவெகவின் பரப்புரைக்கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என 41 பேர் மரணித்தது ஏற்கவே முடியாத பேரவலம். சமகாலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய துயரம். வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி. அதில் உறவுகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டியது தார்மீகக் கடமை. அது முழுமையாக வழங்கப்பட்டுவிட்டப் பிறகு, கரூர் இடைத்தேர்தலுக்காக அரசு வேலை என அறிவிப்பது மிகத் தவறான முன்னுதாரணமாகும். அதனை ஒருபோதும் ஏற்க முடியாது. அரசு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு, வேலைக்காக பல இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்குரிய வேலைவாய்ப்பினைத் தராது, இடைத்தேர்தல் அரசியல் இலாபத்துக்காக அரசு வேலையைத் தாரைவார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நாட்டின் பாதுகாப்புக்காக எல்லையில் நின்று உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கோ, சுகாதாரத்தைப் பேணிகாக்க தூய்மைப்பணியாளர்களாகப் பணிசெய்து, நச்சு வாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கோ, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று, சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கோ கிடைக்காத அரசுப்பணி, திரைக்கவர்ச்சிக்குப் பலியானவர்களின் குடும்பத்தினருக்குக் கிடைக்குமென்றால், இது எந்தவிதத்தில் சரியானது?
கரூரில் உயிரிழந்த 41 பேரின் மரணத்திற்கு தவெகவும், இன்றைக்கு முதல்வர் விஜய்யும்தான் முழுமுதற் காரணம் என்பதை நாடறியும். ஆனால், இந்தநொடிவரை அந்த மரணங்களுக்கு எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது, தன் மீது பழிபோடுவதாகச் சொல்லி, அரசியல் செய்து வருவது மிகக் கீழ்த்தரமானது. அதனைத் தாண்டி, கரூர் இடைத்தேர்தலுக்காக அப்பேரவலத்தைப் பயன்படுத்தி வாக்கு வேட்டையாட முனைவது குரூரத்தின் உச்சம். கரூரில் உயிரிழப்புகள் நிகழ்ந்தபோது களத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்காது, விரைந்து வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்தவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர்களுடைய வீட்டுக்குச் சென்று பார்க்காது, ஒரு மாதம் கழித்து மாமல்லபுரத்திலுள்ள விடுதிக்கு அழைத்துப் பார்த்தவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மீது இப்போது கொள்ளும் பரிவெல்லாம் இடைத்தேர்தலை மனதிற்கொண்டே நடக்கும் கேலிக்கூத்து. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திப்பதிலும், அவர்களுக்கு அரசு வேலை வழங்குவதிலும் பொதிந்திருப்பது மனிதநேயமோ, தார்மீக உணர்வோ இல்லை; முழுக்க முழுக்க அரசியல் இலாப நட்டக்கணக்குதான்! உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே ஒன்றிய, மாநில அரசுகளின் சார்பில் கடந்த காலத்தில் துயர்துடைப்பு நிதி வழங்கப்பட்டுவிட்ட நிலையில், கூடுதலாக அவர்களுக்கு உதவ விரும்பினால் அதனை தவெகவின் சார்பாகவோ, முதல்வர் விஜய் தனிப்பட்ட முறையிலோ செய்யட்டும். அதனைவிடுத்து, அரசு வேலை என்பதனை இடைத்தேர்தலுக்கான கேடயமாகப் பயன்படுத்துவது முறையானதல்ல.
அரசு வேலைக்காக இரவு பகலாகப் படித்துவிட்டு, இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். தகுதித் தேர்வு எழுதிவிட்டு இன்றளவும் பணி ஆணை கிடைக்காமல் ஆசிரியர் பெருமக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பல ஆண்டுகள் பணி செய்துவிட்டு முறையான ஓய்வூதியம் கிடைக்காமல் அரசு ஊழியர்கள் தவித்து வருகின்றனர். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பல்லாயிரம் செவிலியர்களும், ஆசிரியர்களும், கௌரவ விரிவுரையாளர்களும், டாஸ்மாக் ஊழியர்களும், மின்துறை மற்றும் போக்குவரத்துப் பணியாளர்களும், தூய்மைப்பணியாளர்களும் பணி நிரந்தரம் கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத தவெக அரசு, இடைத்தேர்தலை நோக்கமாகக் கொண்டு கரூரில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்குவது மிகத் தவறானப் போக்காகும்.
ஆகவே, கரூர் இடைத்தேர்தலில் தன் அரசியல் இலாபத்தை நோக்கமாகக் கொண்டு, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் தவறான முடிவைக் கைவிட வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@Keerthana4VNR
அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக் கூனிக் குறுக வைத்து, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் நடந்துகொண்டிருப்பது மிகவும் மலினமான விளம்பர அரசியலாகும். தங்களது அரசியல் ஆதாயம் தேடலுக்காகவும், விளம்பர மோகத்திற்காகவும் குழந்தைகளைக்கூட பலிகடாவாக்கத் துடிக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய, அறிவல்ல எனும் அடிப்படை உண்மையைக்கூட உணராத அமைச்சர் கீர்த்தனா, தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலமறியாத அக்குழந்தையைக் குற்றப்படுத்தலாமா? கடைசி இருக்கைக் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் எனும் பொருளில் பள்ளியில் பேசலாமா? அப்படிப் பார்த்தால் சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா என்ன? சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருப்பவர்களுக்குக்கூட அறிவுப்பேரொளி சுடர்விட்டு எரிவது போல தெரியவில்லையே? ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? எனும் அடிப்படைப் பண்புகளைக்கூட கற்காத இவர் அக்குழந்தைக்குப் பாடமெடுப்பது கேலிக்கூத்து இல்லையா? வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அமைச்சர் மரிய வில்சன் தமிழைப் படிக்கவே தடுமாறி நின்றதை நாடே பார்த்ததே, தாய்மொழி தமிழை உச்சரிக்க முடியாது ஒரு அமைச்சரே திணறி நின்றது அவமானமில்லையா? இந்த இலட்சணத்தில் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு, ஒரு அரசுப்பள்ளிக் குழந்தையைக் கைகட்டி நிற்கச் செய்து, கேள்வி எனும் பெயரில் அத்துமீறுவது அக்குழந்தையின் மீதான உளவியல் வன்முறை!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். தனக்குத் தொடர்பே இல்லாத துறையில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தொழிற்துறை அமைச்சரான கீர்த்தனா, அமோனியா கசிவால் உழைக்கும் மக்கள் இறந்துபோன அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட ஏன் செல்லவில்லை? வடசென்னைப் பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகள் பல சூழியல் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், அத்தொழிற்சாலைகளில் விதிகள் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறதா என என்றைக்காவது ஆய்வுக்குச் செய்யச் சென்றிருக்கிறாரா? அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? எல்லாம் விளம்பரமோகம் படுத்தும் பாடு! வெட்கக்கேடு!
ஆகவே, தவெக அரசின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுப்பள்ளிகளில் அத்துமீறுவதையும், அரசியலைப் புகுத்துவதுமான மோசமானப் போக்கைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் இனியாவது கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? அல்லது அரசுப்பள்ளிகளுக்கும் அமைச்சரா? தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகள் மீதும் காட்டத்தவறுவது ஏன்?
@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan
"தனியார் பள்ளிகளுக்கான உரிமங்கள் ஜூலை மாதம் முதல் 100 விழுக்காடு இணையதளம் வாயிலாகப் பெறலாம்; நகைகளை அடமானம் வைத்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். பள்ளிகளை நடத்துவது இலாப கணக்கு அல்ல; புண்ணியக் கணக்கு” என்று தனியார் பள்ளி நிறுவனங்கள் குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கண்ணீர் வடித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கான அமைச்சர் மட்டும்தானா? அல்லது அரசு நடத்தும் பள்ளிகளுக்கும் அவர்தான் அமைச்சரா? தனியார் பள்ளிகள் உரிமம் பெறுவதை எளிதாக்கி அதனை ஊக்குவிப்பதற்குத்தான் அமைச்சர் ஆனாரா ராஜ்மோகன்? தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் நடத்துகிறது என்ற நினைவாவது அமைச்சர் ராஜ்மோகனுக்கு இருக்கிறதா? தனியார் பள்ளிகள் எந்த அளவிற்குப் பெற்றோர்களிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன என்பதாவது அமைச்சருக்கு தெரியுமா? உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைத் தடுத்து தனியார் பள்ளி முதலாளிகளுக்கு உதவிய அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு உதவ எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? தனியார் பள்ளிகள் நடத்துவது புண்ணியக் கணக்கு என்றால் அரசுப்பள்ளிகள் நடத்துவது பாவ கணக்கா? அரசுக்கு அந்தப் புண்ணியம் சேர அமைச்சர் ராஜ்மோகன் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பாவ புண்ணியக் கணக்கு பேசும் அமைச்சர் எத்தனை தனியார் பள்ளிகள் தத்தம் பள்ளிகளில் எத்தனை ஏழை குழந்தைகளுக்கு இலவசமாய் கல்வி தருகின்றன என்று கூற முடியுமா? தனியார் பள்ளிகளின் உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைக் களைய பல்வேறு நடவடிக்கைகளை வேக வேகமாக எடுத்துவரும் அமைச்சர் ராஜ்மோகன், அதே வேகத்தோடு அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?
தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் பள்ளிகள் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளன. மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பயின்று வருகின்றனர். முறையான கழிப்பறை, தூய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள்கூட நிறைவேற்றப்படாத பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. பல்லாயிரம் பள்ளிகளுக்கு பாதுகாப்புச் சுவர்கள் இல்லை. போதிய ஆய்வகங்களோ, விளையாட்டு திடலோ, உபகரணங்களோ இல்லாத ஆயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகள் குறித்த தினம் தினம் கண்ணீர் விடும் அமைச்சர் ராஜ்மோகன் அந்த அக்கறையில் சிறிதளவாவது அரசுப்பள்ளிகளைச் சீர்படுத்தி அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த காட்டாதது ஏன்?
தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,554 அரசுப் பள்ளிகளில் 52 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால், வெறும் 11,890 தனியார் பள்ளிகளில் 53 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தவெக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பெருமக்கள் உரிய ஊதியம், பணி நிரந்தரம் வேண்டி பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில் அவர்களின் துயர் துடைத்து அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் உயர எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு தனியார் பள்ளிகள் குறித்துக் கவலைப்பட்டுக் கண்ணீர் சிந்துவதற்கு வெட்கமாக இல்லையா? தனியார் பள்ளிகள் குறித்து தவெக அரசு உள்ளம் உருகுவதும், தனியார் பள்ளி நிர்வாகிகள் தவெக அரசை உச்சி முகர்வதும் இந்த அரசு யாருக்கானது, கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கானதா? அல்லது தனியார் பள்ளி முதலாளிகளுக்கானதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.
ஆகவே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இனியாவது, தான் தமிழ்நாடு அரசின் அமைச்சர் என்பதை நினைவில்கொண்டு, தனியார் பள்ளிகளை மீதான அக்கறையில் சிறிதளவேனும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதிலும் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
'வரைபடாத சித்திரங்களாகவும் எழுதப்படாத சரித்திரங்களாகவும் எமது வாழ்வுக்காக தமது வாழ்வைத் துறந்த அற்புதமான தியாகிகள்' என்று தமிழ்த்தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன் அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட
கரும்புலிகள் நாள் இன்று!
ஒரு பெருவெடிப்பினால் இப்பூமி உருப்பெற்றது என்கிறது அறிவியல்!
தங்களின் ஒவ்வொரு பெருவெடிப்பின் மூலமும் ஈழத்தாயகத்தை நிலைப்பெற செய்தனர் கரும்புலிகள் என்பதே எம்மின வரலாறு!
தாயக விடுதலைக்கு தங்கள் உயிரையும், உடலையும் கொடையாக கொடுத்த வீரமறவர்கள்!
தங்கள் இன்னுயிரை இழந்து இனத்தின் அரணாக உயர்ந்து மிளிர்ந்தவர்கள்!
உயிரையே ஆயுதமாக ஏந்தி உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மாவீரர்களுக்கு கரும்புலிகள் நாளில் வீரவணக்கத்தை செலுத்துகின்றேன்!
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்!
தமிழ்நாட்டில் பிறந்து ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின மக்களுக்காகப் போராடிய மனித உரிமைச் செயற்பாட்டாளரும், சமூகப் போராளியுமான ஐயா ஸ்டான் சுவாமி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
முதுமையாலும், உடல்நலக்குறைவாலும் நலிவுற்றிருந்த ஐயா ஸ்டான் சுவாமி அவர்களை பொய் வழக்கில் தொடர்ச்சியாகச் சிறைப்படுத்தி, அவரது உடல்நலனை மேலும் குன்றச் செய்த பாஜக அரசின் கொடுங்கோல் செயல்பாட்டின் விளைவாகவே ஐயா ஸ்டான் சுவாமியின் மரணம் நிகழ்ந்தது, நடுக்கவாத நோயால் நீரருந்தக்கூட முடியாது அவதிப்பட்டு வந்தவருக்கு உறிஞ்சுக்குழாய் கொடுப்பதற்கு நீதிமன்றத்தில் காலநேரம் கேட்டு, பிறகு, அதனையும் தரமுடியாதென மறுத்தது பாஜக அரசு.
தேசியப் புலனாய்வு முகமைக் குற்றஞ்சாட்டிய 44 ஆவணங்களும் ஐயா ஸ்டான் சுவாமியின் கணினியில் அவருக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டவை என்பது ‘அர்செனல் கன்சல்டிங்’ எனும் அமெரிக்கத் தடயவியல் நிறுவனம் கண்டுபிடித்தின் மூலம் அவர் மீதான கைது நடவடிக்கை ஆளும் பாஜக அரசின் அப்பட்டமான பழிவாங்கல் என்பது உறுதியானது. .ஐயா ஸ்டான் சுவாமியின் மரணமென்பது சட்டத்தின் உதவியோடு, சனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி பாஜக அரசு செய்த பச்சைப்படுகொலை. கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேஷ் போன்ற சனநாயகம் காக்க தங்கள் இன்னுயிரை பறிகொடுத்த சமூக செயற்பாட்டாளர்கள் வரிசையில் ஐயா ஸ்டான் சுவாமி அவர்களும் இணைந்த நாள் இன்று.
வாழ்நாள் முழுவதும் பழங்குடியின மக்களுக்காக போராடி வாழ்ந்து மறைந்த ஐயா ஸ்டான் சுவாமி அவர்களின் ஈகம் வரலாற்றில் நிலைபெற்றிருக்கும்!
ஐயா ஸ்டான் சுவாமி அவர்களின் பேரீகம் போற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ் இறையோன், எங்களின் முப்பாட்டன் முருகப்பெருமான் வரலாற்றைத் திரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!
தமிழ் இறையோன் முருகப்பெருமானை மையப்படுத்தி "என்.டி.ஆர்-திரிவிக்ரம் என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில், ‘தமிழர் இறையோன்’ முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாகப் படக்குழு பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கலைப்படைப்பு என்ற பெயரில் அடிப்படை புரிதலற்று, இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை உண்மையெனக் கட்டமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்ம வரலாறு கொண்ட தமிழப்பேரினம், தனக்கென்று தனித்த கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மெய்யியல் கோட்பாடு, இறை வழிபாடு என யாவற்றையும் கொண்டதாகும். இயற்கையை தொழுது போற்றுவதும், புகழோடு மறைந்த மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும். அதனடிப்படையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தமிழ் முன்னோர்களையும், மூத்தோர்களையும் காலங்காலமாக தெய்வமாகப் போற்றி வணங்கி வருதல் தமிழரின் மெய்யியல் கோட்பாடாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே தமிழர்களின் ஐவகைத் திணை நிலங்களுள் முதன்மை நிலமாகத் திகழும் குறிஞ்சித்திணையின் தலைவன் மூத்தோன் முருகனை முப்பாட்டன் என அழைப்பதும், வணங்கிப் போற்றுவதும் தமிழரின் மரபு சார்ந்த தொடர்ச்சியான வழிபாட்டு முறையாகும்.வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வீரவரலாற்றையும், பண்டைய அடையாளங்களையும் மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்து மீண்டெழத் துடிக்கும் நேரத்தில், கற்பனை படைப்புகள் மூலம் இதுபோன்று உண்மைக்குப் புறம்பான திரிபுகள் திணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
தனக்கெனத் தனித்த அடையாளத்தையோ, பண்பாட்டுக்கூறுகளையோ, வழிபாட்டு முறைமைகளையோ, இறையியல் மரபுகளையோ கொண்டிராத மாற்றினங்கள் தமிழின முன்னோர்கள் சிவன், முருகன், கண்ணன், திருமால், கொற்றவை என யாவற்றையும் தங்கள் கடவுளரென திருடிச்சேர்த்துக் கொண்டனர். தமிழர்த் திணை நிலங்களின் வாழ்ந்த தெய்வங்கள் மீதும், தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி மொத்தமாய் அபகரித்துவிட்டனர். அதன் விளைவாக, முருகனை சுப்ரமணியனாக்கினார்கள். கண்ணனை கிருஷ்ணனாக்கினார்கள். திருமாலை விஷ்ணுவாக்கினார்கள். கொற்றவையைப் பார்வதியாக்கினார்கள். சிவனை ருத்திரனாக்கினார்கள். தமிழர் முன்னோர்களை மொத்தமாய்ப் புராணப்பாத்திரங்களாக மாற்றி நிறுத்தினார்கள். கடவுளையே கடன் கொடுத்த இனத்தின் பிள்ளைகள் நாங்கள்.
இரவலாக எங்களின் கடவுளர்களை எடுத்துக்கொண்டு போன பிறகும், இன்றளவும் முழுதாய் அபகரிக்க முடியாமல் தமிழர்களுக்கென்ற தனிப்பெரும் இறையோனாக இருப்பவர் தமிழ்க்கடவுள் முப்பாட்டன் முருகப்பெருமான். தொன்றுதொட்ட தமிழ்ப்பண்பாட்டோடு, வாழ்வியலோடு ஒன்றர கலந்த தமிழர்களின் மிக மூத்த ஆதி இறைவன் முருகப்பெருமான். அவரையும் தமிழ்ப்பேரினம் இழக்கவிட மாட்டோம். தமிழ்தான் முருகன்; முருகன்தான் தமிழ்; இரண்டும் பிரிக்க முடியாதது. தமிழர் இறையோன் முருகன் என்பது எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்த ஒன்று. முருகன் தமிழர்களின் முப்பாட்டன் என்பது அரசியல் அல்ல; அது எங்கள் பண்பாடு, வாழ்வியல்; தமிழர் போற்றும் தெய்வங்களை வணங்குவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், வரலாற்றை தவறாக திரித்து கட்டமைத்து இழிவுப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை.
முதுபெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் தொடங்கி திருமுருகாற்றுபடை உள்ளிட்ட பத்துப்பாட்டு நூல்கள், எட்டுத்தொகை நூல்கள், சிலப்பதிகாரம் சங்கத்தமிழ் இலக்கியங்கள் பலவும், சேயோன், செவ்வேள், சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் என்று பற்பல செந்தமிழ் பெயர்களால் முருகனைப் போற்றிப் புகழ்கின்றன. மேலும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட பற்பல பக்தி இலக்கியங்களும் தமிழ் இறையோன் முருகனை போற்றுகின்றன. சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாட்டு என்ற தொல்குடி மக்களின் சடங்கும் வியந்து குறிப்பிடப்பட்டுள்ளது.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று தமிழ் கூறும் முதுமொழியை மெய்ப்பிக்கும் விதமாகவே முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட தமிழ்நாட்டின் குன்றுகள் தோறும் குமரனின் கோட்டங்கள் நிறைந்துள்ளன. எனவே, முருகன் தமிழர்களுக்கு உரித்தான தனிப்பெருங்கடவுள் என்ற பேருண்மையை நிறுவும் வல்லமை தமிழுக்கும், தமிழர்களுக்கும் எப்போதும் உண்டு. மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றேன்.
(1/2)
கன்னியாகுமரி அணுக்கனிமக் கொள்ளை: கதிரியக்கத் திட்டத்திற்குத் துணைபோகும் அனுமதி நீட்டிப்பு ஆணையைத் த.வெ.க அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
@CMOTamilnadu@drtkprabhu_TVK@CTR_Nirmalkumar@DAEIndia@moefcc@byadavbjp
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட 1144 ஹெக்டேர் பரப்பளவில் கதிரியக்கத் தாக்கம் ஏற்படுத்தும் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் இந்திய அருமணல் நிறுவனத்தின் (IREL) அழிவுத் திட்டத்திற்கு, மேலும் ஓராண்டு கால நீட்டிப்பு வழங்கி அரசாணை (G.O. Ms No. 12) வெளியிட்டிருக்கும் தமிழக வெற்றிக் கழக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியதாகும். அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு, கடந்த 03.11.2024 அன்று நடந்த த.வெ.க-வின் செயற்குழுக் கூட்டத்தில், "தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் அபாயம் விளைவிக்கும் நாசகார, நச்சுத் திட்டம்" என இந்த அணுக்கனிம அகழ்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால், இன்று அதே திட்டம் 10.06.2026 அன்றுடன் முழுமையாகக் காலாவதியாக இருந்த நிலையில், சரியாக இறுதி நாளில் அத்திட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்து, ஒட்டுமொத்தத் தென் தமிழக மக்களையும் கதிரியக்கப் பாதிப்பிற்குள்ளாக்கும் செயலுக்கு துணைபோயிருக்கிறது த.வெ.க அரசு.
கீழ்மிடாலம், மிடாலம், இனயம்புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் தாது மணலில் இருந்து மோனசைட் (Monazite), சிர்கான் (Zircon) உள்ளிட்ட கதிரியக்கக் கனிமங்களைப் பிரித்தெடுப்பது ஈடுசெய்ய முடியாத சூழலியல் பேரழிவை ஏற்படுத்தும். இந்த அகழ்வினால் ஏற்படக்கூடிய கதிரியக்கம் சுற்றுப்புறக் கிராமங்களில் பரவிப் பொதுமக்களைப் புற்றுநோய்க்கு ஆளாக்கும் ஆபத்து உள்ளது. கடலோர மணலில் இருந்து தாதுப் பொருட்களைப் பிரித்து எடுத்த பிறகு கழிவு நீரையும் மணலையும் கொட்டுவதால் கடல் நீரின் தன்மை மாறுவதோடு, மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாகச் சீரழிக்கப்படும்.
சென்ற மாதம் தான் தமிழ்நாட்டின் குவாரிகளுக்கு புகைப்படக் கலைஞர் குழு புடைசூழ பார்வையிட்டு ‘இயற்கை வளப் பாதுகாவலர்’ என்று சமூக ஊடகங்களில் தன் ரசிகர் பட்டாளத்தை வைத்துப் பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தார் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு அவர்கள். ஆனால், அந்த விளம்பரங்களின் சாயம் வெளுக்க ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதே அமைச்சகத்தின் கீழ் இருக்கும் இயற்கை வளங்கள் துறைதான், கன்னியாகுமரியின் 1144 ஹெக்டேர் பரப்பளவை அணுக்கனிமக் கொள்ளைக்குத் தாரைவார்க்கும் அரசாணையில் கையெழுத்திட்டுள்ளது. குவாரிகளை சீரமைப்பது போல் பாவனை செய்துவிட்டு, ஒட்டுமொத்தக் கடலோரத்தையே கதிரியக்கப் பாதிப்பிற்குள்ளாக்கும் ஒன்றிய அரசின் IREL நிறுவனத்திற்கு சிகப்பு மின்கம்பளம் விரிப்பதுதான் அமைச்சர் பிரபு அவர்களின் ‘அதிரடி’ நிர்வாகமா? விளம்பரத்திற்கு ஒரு முகம், ஒன்றிய அரசுக்கு ஒரு முகம் காட்டும் இந்த இரட்டை வேடத்தைத்தான் மக்கள் கடந்த மாதம் கொண்டாடித் தீர்த்தார்களா?
மக்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய ஒன்றிய பாஜக அரசு, 08.09.2025 அன்று அறிவித்திருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தையே நடத்தாமல் திரும்பபெற்று, எப்படியாவது இத்திட்டத்தை செயல்படுத்திவிட முடியாதா என்று முயற்சிக்கும் நேரத்தில் மாநில அரசோ, IREL நிறுவனத்திற்குத் தேவையான கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதியைப் பெற வசதியாகக் கால நீட்டிப்பை வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் கனிமவளக் கொள்ளைக்குத் தலையாட்டி பொம்மையாகச் செயல்படுவதைத் தவெக அரசு கைவிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி, IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கால நீட்டிப்பு அரசாணையை திரும்பப்பெற வேண்டும். கன்னியாகுமரி மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் இந்த சட்டப்போராட்டத்திலும், களப்போராட்டத்திலும், இத்திட்டத்தை முழுமையாகக் கைவிடும் வரை மக்களுடன் இணைந்து மாபெரும் எதிர்ப்பினை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
IREL நிறுவனத்தின் அணுக்கனிம சுரங்க ஒதுக்கீட்டுக்கு த.வெ.க. அரசு அனுமதி நீட்டிப்பு அளித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியதாகும். @TVKVijayHQ
ஜூன் 11, 2021ல் 1144 ஹெக்டேரில் ஒதுக்கப்பட்ட இத்திட்டத்திற்கான இட அனுமதியின் காலக்கெடு 5 ஆண்டுகள் மட்டுமே. இது தற்பொழுது முடிவடையவிருந்த நிலையில், ஆளும் தவெக அரசு காலாவதியாகிப் போக இருந்த இந்த அனுமதியினை மேலும் ஓராண்டிற்குப் புதுப்பித்து இந்நாசகரத் திட்டத்திற்குப் புத்துயிர் ஊட்டியுள்ளது.
ஆனால், நவம்பர் 2024ல் தவெக கூட்டிய செயற்குழு கூட்டத்திலோ இத்திட்டத்தினைக் கைவிட வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனால்தான் சொல்கிறோம் தவெகவிற்கும் வளப்பாதுகாப்பு மற்றும் தமிழ்நாட்டின் நலனிற்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்று! பாஜக மட்டுமில்லை, தவெகவும் தமிழ்நாட்டிற்குத் தொடர்பற்றத் தேவையில்லாத சக்திதான்.
@NTKEnvWing@Seeman4TN
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
தாத்தா மயிலை பொன்னுசாமி சிவஞானம் அவர்களின் பிறந்தநாள் இன்று!
தமிழ்நாட்டின் வடக்கெல்லை காக்க அரசியல் அறப்போர் புரிந்த வீரர்..!
திருப்பதி கேட்டு, திருத்தணி மீட்டு தலைபோனாலும் தலைநகர் சென்னையைத் தரமாட்டோம் என்று காத்திட்ட தீரர்..!
முதன் முதலில் மாநில தன்னாட்சி முழக்கமிட்ட தனிப்பெருந்தலைவர்!
தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும்; அத்தகு சுதந்திர அரசியல் சுயநிர்ணய உரிமை தமிழருக்கு உண்டென உரைத்து, தமிழ்த்தேசிய அரசியல் காக்க தமிழரசு கழகம் கண்ட தன்மானத்தமிழர்..!
தன்னிகரில்லா தமிழ்ப்பெரும் காப்பியமாம் சிலப்பதிகாரத்தை தம் எழுத்தாலும், சொல்லாலும் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெலாம் கொண்டு சேர்த்ததோடு, ஆண்டுதோறும் 'சிலப்பதிகார விழா' எடுத்தும் பெருமை சேர்த்த பெருந்தகை..!
சிலப்பதிகாரம் குறித்து 13 நூல்கள், பாட்டன் பாரதி பற்றி 10 நூல்கள், தாத்தா வ.உ.சி பற்றி 3 நூல்கள் என இன்னும் பற்பல நூல்கள் இயற்றி அன்னைத்தமிழுக்கு அணி சேர்த்த இலக்கியப் பேரறிஞர்..!
வடக்கெல்லை காத்த வீரர்!
பெருந்தமிழர்!
நம்முடைய தாத்தா ம.பொ.சி அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
@svembu@majilesh What's even more pathetic is people celebrating a billionaire for exposing corruption now, while never asking why he stayed silent when a "supposedly corruption-free central govt is in power". Acting as if he is a powerless common man whose voice wouldn't be heard is absurd
@svembu@majilesh what stopped you from exposing this then? What is stopping you from exposing the concern officials and ministers even now? So you are UNWILLINGLY FORCED TO BRIBE only for your school? Wow how easily corruption is being eradicated in this new TN regime for these people.
மேகதாது அணையை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்து!
@CMOTamilnadu@TVKVijayHQ
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் ஆளும் தவெக அரசின் போக்கு மிக மிகத் தவறான முடிவாகும். நடுவர் மன்றம் கோரும் திருத்தத்தை சட்டமன்றத் தீர்மானத்தில் எதிர்க்கட்சியான திமுக சேர்க்கக் கோரியதும், அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு, திருத்தித் தீர்மானத்தை இயற்றியிருக்கும் செயல்பாடு ஆளும் தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் காவிரி நதிநீர் உரிமையில் அக்கறையோ, அடிப்படைப்புரிதலோ இல்லை என்பதையே காட்டுகிறது. இத்தோடு, கடந்த திமுகவின் ஆட்சியிலேயே நடுவர் மன்றம் கோரிக் கடிதம் எழுதப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் விஜய்யும் கூறியிருப்பது கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை நாடினால், அது தற்போதிருக்கும் நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்தாக முடியும் எனும் குறைந்தபட்சப் பார்வையும், தொலைநோக்குச் சிந்தனையும்கூட இல்லாது, முன்வைக்கப்படும் நடுவர் மன்றக் கோரிக்கையை மிகக் கடுமையாக எதிர்க்கிறேன்.
கீழ்ப்பாசன மாநிலங்களின் அனுமதியும், ஒப்புதலும் இல்லாது, மேல்பாசன மாநிலங்கள் அணை உள்ளிட்ட கட்டுப்பானப்பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்பது மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ச்சிக்கலில் பின்பற்ற வேண்டிய விதி; சட்டம். இதனை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டல்களும் உறுதிசெய்கின்றன. கர்நாடகத்தைப் பொறுத்தவரை எல்லா விதிகளையும், சட்டங்களையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு அடாவடித்தனம் செய்வதும், முழுக்கத் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவதுமானப் போக்குகளில்தான் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. கபினி அணை, ஹேமாவதி அணை, ஹாரங்கி அணை உள்ளிட்டவை யாவும் விதிகளுக்கும், சட்டத்திற்கும் புறம்பாகவே கட்டப்பட்டது. விதிகளுக்கு மாறாகவே கர்நாடகத்தின் பாசனப்பரப்பும் விரிவுப்படுத்தப்பட்டது. அதன் நீட்சியாகவே, தற்போது மேகதாதுவிலும் அணை கட்டி, காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தனதாக்கிக் கொள்ளத் துடிக்கிறது கர்நாடக அரசு. மொத்தத்தில், தமிழ்நாட்டை மாறி ஆண்ட ஆண்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் காவிரி உரிமை காவு கொடுக்கப்பட்டது என்றே கூறலாம்.
தமிழ்நாட்டு அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது ஏற்கனவே இருக்கும் விதிகளின்படியே சட்ட விரோதம்தான் எனும்போது புதிய நடுவர் மன்றம் என்பது தேவையில்லாத ஒன்றாகும். ஒருவேளை, நடுவர் மன்றம் புதிதாக அமைக்கப்பட்டால் சிக்கலை மேலும் நீட்டிக்கவும், இன்னும் பல காலம் அதனை இழுத்துக்கொண்டே போகவும் வழிவகை செய்திடும். ஒருவேளை, அந்நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்குமானால் சட்டப்பூர்வமாக இருக்கும் கடைசி வாய்ப்பையும் தமிழ்நாடு இழக்க நேரிடும். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியில், காவிரி நதிநீர் உரிமைகளுக்கென நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித்தீர்ப்பு, தீர்ப்பு அரசிதழில் வெளியிடு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆணையம் எனப் பலகட்டப் படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி, 177.25 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தர வேண்டும். அதனைத் தர மறுத்து சண்டித்தனம் செய்து வரும் கர்நாடக அரசு மழை, வெள்ளக் காலங்களில் பெய்யும் மழைநீரை வெளியேற்றும் வடிகாலாக மட்டுமே தமிழ்நாட்டை இதுவரைப் பயன்படுத்தி வருகிறது. மற்றபடி, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தண்ணீரை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, நடுவர் மன்றத் தீர்ப்பு என எல்லாமிருந்தும் கர்நாடக அரசு அவற்றை ஏற்க மறுத்து அட்டூழியம் செய்கிறது.
காவிரியாற்றின் `குறுக்கே அணை கட்டுவதையும் தடுக்கவும், தமிழ்நாட்டுக்கு உரிய நதிநீர் பங்கீட்டைத் தரவும் சட்டவிதிகள் வலியுறுத்துகின்றன. நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வழிகாட்டுகின்றன. இருந்தபோதிலும், அவற்றைப் புறந்தள்ளி எதேச்சதிகாரப்போக்கோடு நடந்துகொள்கிறது கர்நாடக அரசு. தமிழ்நாட்டுக்கான உரிய நதிநீர் பங்கீட்டையும், நீதியையும் உறுதிசெய்ய சட்டப்பூர்வக் காரணிகள் இருக்கின்றன. அவற்றைக் கர்நாடக அரசு ஒருநாளும் மதித்து ஏற்பதில்லை என்பதுதான் இங்கிருக்கும் முதன்மைச்சிக்கல். உண்மை இவ்வாறிருக்க, மேகதாதுவுக்கு எதிராக நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் கோரிக்கை என்பது துளியும் ஏற்புடையதல்ல; அது தேவையற்ற சிக்கலையே புதிதாய் உருவாக்கும். நடுவர் மன்றம் கோரி இயற்றப்பட்ட இத்தீர்மானம் முழுக்க முழுக்க தமிழின விரோதமாகும். அதனைக் கண்டித்து வரும் 27.06.2026 அன்று தஞ்சாவூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தீர்மான நகலெரிப்புப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் பங்கேற்கிறது எனப் பேரறிவிப்புச் செய்கிறேன்.
ஆகவே, காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் முடிவைக் கைவிட்டு, அத்தீர்மானத்தைப் பின்வாங்கி, புதிய தீர்மானத்தை இயற்ற வேண்டுமெனவும், அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து, தமிழ்நாட்டுக்குரிய காவிரி நதிநீர் பங்கீட்டு உரிமையை உறுதிசெய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய சட்டப்போராட்டங்களையும், ஆக்கப்பூர்வப் பணிகளையும் தொடங்கிட வேண்டுமெனவும் தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
திருவள்ளூர், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு : தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், தொடர்புடையவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
@CMOTamilnadu@TVKVijayHQ
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா நச்சுக்காற்று கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிப்பு; 60க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி எனும் துயரச்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனர் பெண்கள் என்பது துயரத்தை மேலும் அதிகரிக்கிறது. உயிரிழந்தத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.
ஏற்கனவே, வடசென்னை பகுதியில் அவ்வப்போது நிகழும் நச்சுக்காற்று கசிவால் அப்பகுதி மக்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த சூன் 2 அன்று துறைமுகம் பகுதியிலிருந்து கசிந்த நச்சுப்புகையால் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இருந்தவர்களே மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதும் நிகழ்ந்தேறியது. அதன்பிறகாவது, தவெக அரசு தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது திருவள்ளூரில் இத்தகைய கொடும் விபத்து நிகழ்ந்திருக்காது. தொழிற்சாலைகளில் அரசு தொடர்ச்சியாக முறையான ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே இதுபோன்ற கொடும் விபத்துகள் நிகழ்வைத் தவிர்க்க முடியும்.
சூழலியல் சீர்கேடுகளைப் பற்றிக் கவலைப்படாமல், வளர்ச்சி என்ற பெயரில், வேலைவாய்ப்புகளைக் காரணமாகக் காட்டி, பன்னாட்டு, உள்நாட்டு தனியார் தொழிற்சாலைகளுக்கு சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும் அரசுகள், இதுபோன்ற தொழிற்சாலைகள் விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கின்றவா? என ஒருநாளும் கண்காணிப்பதுமில்லை; சோதிப்பதுமில்லை. அதன் விளைவாகவே, இதுபோன்ற கோரவிபத்துகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆகவே, தவெக அரசு இனியேனும் தமிழ்நாடு முழுவதுமுள்ள தொழிற்சாலைகளை ஆய்வுசெய்து தொழிலாளர்களின் பாதுகாப்பினையும், சூழலியல் நலத்தினையும் உறுதி செய்திட வேண்டும். மேலும், இவ்விபத்து நடந்தேறிய கன்னிகைப்பேர் பகுதியில் வாழும் மக்களுக்கு எவ்வித உடல்நலக்குறைபாடும் ஏற்படாவண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
ஆகவே, உழைக்கும் தொழிலாளர்களின் உயிர்களைப் போக்கிய இக்கோர விபத்துக்கானப் பின்புலமும், பின்னணியும் கண்டறியப்பட்டு, தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி