காவிரி பாசன நீர் வராததால் தமிழ்நாட்டு விவசாயிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தவெக அமைச்சர்கள் திரைப்படம் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது!
@CMOTamilnadu@TVKVijayHQ
வறண்டு கிடக்கும் காவிரி நதிப் பார்த்தும், வாடிக் கிடக்கும் நெற்பயிர்கள் பார்த்தும், நாளும் தமிழ்நாட்டு விவசாயிகள் கவலையில் உழன்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் வேளையில், அது குறித்து அணுவளவும் கவலையின்றி, தவெக அமைச்சர்கள் ‘ஜனநாயகன்’ படம் பார்த்துத் திரையரங்கில் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது! வன்மையான கண்டனத்துக்குரியது.
குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை போதிய நீர் இல்லாததால் இதுநாள் வரை திறக்கப்படாததால் வேதனையில் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். குறுவை சாகுபடிதான் பொய்த்துப்போனது, குறைந்தபட்சம் சம்பா சாகுபடிக்காவது காவிரி பாசன நீர் திறக்கப்படுமா என்று டெல்டா விவசாயிகள் கண்ணீரோடு காத்திருக்கும் நிலையில், ஒரு சொட்டு நீர்கூடத் தரமுடியாது என்று கர்நாடகாவை ஆளும் காங்கிரசு அரசு கை விரித்துவிட்டது. காங்கிரசு கட்சியைக் கூட்டணியில் சேர்த்து அமைச்சர் பதவி வழங்கி, ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்துள்ள தவெக அரசு, கர்நாடக அரசின் அடாவடித்தனத்திற்கு இதுவரை ஒரு சிறு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை என்பதுதான் பெருங்கொடுமை. கூட்டணிக் கட்சியான காங்கிரசு ஆளும் கர்நாடக அரசிடம் சுமூகமாக பேசி காவிரி நீரைப்பெற்றுத் தரத்தான் தவெக அரசிற்கு திராணி இல்லை. குறைந்தபட்சம் கண்டனம் தெரிவிக்கக் கூடத் துணிவு இல்லையா?
அண்மையில் காவிரி நீர் இருப்பு குறித்து முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டம் முடிந்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் முதல் வாரம் கூடி ஆலோசிக்கப்படும் என்று அறிவித்தது கண்டு, வேளாண் பெருங்குடி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆலோசனை நடத்துவதற்கு ஏன் ஆகஸ்ட் முதல் வாரம் வரை காத்திருக்க வேண்டும்? பேச்சுவார்த்தையோ, சட்டப்போராட்டமோ விரைந்து நடவடிக்கை எடுத்து, காவிரிப்பாசன நீரைப் பெற்றுத்தருவது ஒன்றே விவசாயிகளின் வேதனை துடைக்கும் அருமருந்தாகும். அதைவிடுத்து கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தவே ஆகஸ்ட் மாதம் வரை இழுத்தடிப்பது காவிரிப்பாசன விவசாயிகளைக் கண்ணீர் கடலில் தவிக்கவிடும் கொடுஞ்செயலாகும்.
ஏற்கனவே, தமிழ்நாட்டில் அரிசி விலை நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவிற்கு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரிசி விலை 25 ரூபாய் வரை அதிகரித்து, கடைகளில் கிலோ 85 ரூபாய் வரை விற்கப்படுகின்றது. இந்நிலையில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பொய்த்து, நெல் உற்பத்தி மேலும்பாதிக்கப்படுமாயின், தமிழ்நாட்டில் அரிசியின் விலை நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்குப் பன்மடங்கு உயரும். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும். அப்படி ஒரு அவலநிலை ஏற்பட்டால், அதற்கு காவிரி நீரைப் பெற்றுத்தராத தவெக அரசின் அலட்சிய செயல்பாடே முழுமுதற் காரணமாகும்.
ஆகவே, கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப்பெறுவதற்கு தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் மாதம் வரை காத்திராமல், அடுத்தகட்ட நடவடிக்கையை உடனடியாகத் தொடங்கி, விரைந்து காவிரிப்படுகை விவசாயிகளின் கண்ணீர் துடைத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நீட் தேர்வில் முறைகேடு செய்த குற்றவாளிகளைக் கைதுசெய்யாமல், நீதிவிசாரணை கோரிப் போராடும் இளைஞர் கூட்டத்தின் மீது அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதா?
நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கெதிராக, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எனும் அமைப்பின் சார்பாக டெல்லி, ஜந்தர் மந்தரில் 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் அறப்போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். அப்போராட்டத்தின் நீட்சியாக, நேற்றையதினம் அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என யாவரும் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாய் செல்ல முயன்ற நிலையில், அவர்கள் மீது கொடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, காவல்துறையின் மூலம் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்காமல், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து, கைதுசெய்யாமல், முறைகேட்டுக்கு நீதிவிசாரணை கோரி, அறவழியில் போராடும் இளைய தலைமுறையினர் மீது தாக்குதல் தொடுப்பது ஏற்கவே முடியாத பேரவலம்; சகித்துக் கொள்ள முடியாத அரச வன்முறையாகும். மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பிருந்தும் பாபர் மசூதியை நோக்கிச் செல்ல மதவெறியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட இதே நாட்டில், நாடாளுமன்றம் நோக்கி அறவழியில் பேரணியாய் செல்லக்கூட இளைஞர் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாதது கேலிக்கூத்தானது. நாடாளுமன்றம் என்பது நாட்டின் குடிமக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களின் அவை. அந்த அவை மக்களுக்கான நீதியையும், சமவாய்ப்பையும் நிலைநாட்டாதபோது, அந்த அவையை நோக்கிச் சென்று, நீதிகேட்பதைத் தவிர, எளிய மக்களுக்கு வேறு வழியென்ன இருக்கிறது? மன்னராட்சிக்காலத்தில்கூட மன்னனின் அரசவைக்குள்ளேயே சென்று, சாதாரண குடிமக்களால் நீதிகேட்க முடிந்தது; அரசனை நோக்கி விரல்நீட்டிக் கேள்வியெழுப்ப முடிந்தது. ஆனால், மக்களாட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணியாய்கூட செல்ல முடியவில்லை என்பது வெட்கக்கேடானது இல்லையா? வெள்ளையர்களுக்கு எதிராக, பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் குண்டுவீசி, ‘புரட்சி ஓங்குக’ என வீரமுழக்கமிட்ட இளையப் புரட்சியாளர் பகத் சிங்கைக் கொண்டாடும் திருநாட்டில், பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணியாய் செல்வதற்குக்கூட ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தடைவிதித்து, போராடுவோர் மீது ஒடுக்குமுறையைப் பாய்ச்சுமென்றால், இது சனநாயகப்பேரவலம் இல்லையா? இவ்வளவு நடந்தும் நாட்டின் நிர்வாகத் தலைவரான பிரதமர் நரேந்திரமோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாய்மூடி மௌனமாக இருப்பது அதிகாரத்திமிர் இல்லையா? நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராகப் போராடும் இளையோர் கூட்டத்தின் அறச்சீற்றம் நியாயமானது. அதேசமயம், நீட் தேர்வு என்பதே மிகப்பெரும் முறைகேடு; மோசடி. அதனை முற்றாகத் துடைத்தெறிய வேண்டும் என்பதற்காகவே தமிழர் நிலத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆகவே, நீட் தேர்வுக்குரிய வினாத்தாள்கள் கசிவு எனும் கல்வித்துறையின் முறைகேடுகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிவிலக வேண்டும் எனும் கோரிக்கை முழக்கம் மிகச் சரியானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக வரவேற்கிறது.
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டுக்கு எதிராகப் போராடும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் மீது ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு அரசப்பயங்கரவாதத்தை ஏவிவிட்டு, போராட்டக்களத்தை வன்முறைக்களமாக மாற்றியது ஒட்டுமொத்த நாட்டுக்குமானப் பேரவமானம்; வரலாற்றில் கறுப்புப்பக்கங்களாகப் பதிவுசெய்யப்படும் கோர நிகழ்வாகும்.
ஆகவே, நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் முறையான நீதிவிசாரணை செய்ய வேண்டுமெனவும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவிநீக்கம் செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள்!
மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து
இலவச மதிய உணவு கொடுத்து
தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின்
கல்விக்கண் திறந்த கடவுள்..!
மணிமுத்தாறு, சாத்தனூர், அமராவதி,
வைகை, நெய்யாறு, பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய அணைகளையும் கட்டியதோடு
33,000 நீர்நிலைகளைச் சீரமைத்து
வேளாண்மை செழிக்க வழி செய்த
ஆகச்சிறந்த ஆட்சியாளர்..!
ஆவடி கனரக ஆலை,
சேலம் உருக்கு ஆலை,
நெய்வேலி நிலக்கரி அனல்மின் நிலையம், பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை,
திருச்சி பெல் தொழிற்சாலை என 18க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொடங்கச்செய்து தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட
புரட்சியாளர்..!
இத்தனை சாதனைகளும் செய்த
9 ஆண்டுகால ஆட்சியில்,
மதுவினை விற்று அரசை நடத்தவில்லை. இலவசம் கொடுத்து
மக்களை ஏமாற்றவில்லை.
6 முறை கைது செய்யப்பட்டு
9 ஆண்டுகள் சிறைவாசம்,
15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்,
14 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசு தலைவர்,
9 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர்,
8 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்,
3 ஆண்டுகள் அகில இந்திய
காங்கிரசு கட்சி தலைவர்,
2 பிரதமர்களை உருவாக்கிய
ஒற்றைப் பெருந்தலைவர்!
பதவிகள் பல வகித்தபோதும்
ஓர் ஊழல் முறைகேடு புகார் இல்லை..!
கோடி கோடியாக
சொத்து சேர்க்கவில்லை..!
குடும்பத்து வாரிசுகளுக்குப்
பதவி கொடுக்கவில்லை..!
உண்மையும் நேர்மையுமான
ஒப்பற்ற தூய ஆட்சி தந்து
தமிழ்நாட்டினை முன்னேற்றிய
தன்னிகரில்லாத் தலைவர்!
நாட்டின் விடுதலைக்காகப் போராடி
3000க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் வதைபட்ட நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களினுடைய பெரும்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், வழிவழியே
வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய
நாம் அவரைப் போன்றே நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!
எழுத்தறிவித்த இறைவன்!
நம்முடைய தாத்தா
பெருந்தலைவர்
காமராசர் அவர்களின்
பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@Keerthana4VNR
அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக் கூனிக் குறுக வைத்து, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் நடந்துகொண்டிருப்பது மிகவும் மலினமான விளம்பர அரசியலாகும். தங்களது அரசியல் ஆதாயம் தேடலுக்காகவும், விளம்பர மோகத்திற்காகவும் குழந்தைகளைக்கூட பலிகடாவாக்கத் துடிக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய, அறிவல்ல எனும் அடிப்படை உண்மையைக்கூட உணராத அமைச்சர் கீர்த்தனா, தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலமறியாத அக்குழந்தையைக் குற்றப்படுத்தலாமா? கடைசி இருக்கைக் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் எனும் பொருளில் பள்ளியில் பேசலாமா? அப்படிப் பார்த்தால் சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா என்ன? சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருப்பவர்களுக்குக்கூட அறிவுப்பேரொளி சுடர்விட்டு எரிவது போல தெரியவில்லையே? ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? எனும் அடிப்படைப் பண்புகளைக்கூட கற்காத இவர் அக்குழந்தைக்குப் பாடமெடுப்பது கேலிக்கூத்து இல்லையா? வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அமைச்சர் மரிய வில்சன் தமிழைப் படிக்கவே தடுமாறி நின்றதை நாடே பார்த்ததே, தாய்மொழி தமிழை உச்சரிக்க முடியாது ஒரு அமைச்சரே திணறி நின்றது அவமானமில்லையா? இந்த இலட்சணத்தில் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு, ஒரு அரசுப்பள்ளிக் குழந்தையைக் கைகட்டி நிற்கச் செய்து, கேள்வி எனும் பெயரில் அத்துமீறுவது அக்குழந்தையின் மீதான உளவியல் வன்முறை!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். தனக்குத் தொடர்பே இல்லாத துறையில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தொழிற்துறை அமைச்சரான கீர்த்தனா, அமோனியா கசிவால் உழைக்கும் மக்கள் இறந்துபோன அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட ஏன் செல்லவில்லை? வடசென்னைப் பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகள் பல சூழியல் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், அத்தொழிற்சாலைகளில் விதிகள் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறதா என என்றைக்காவது ஆய்வுக்குச் செய்யச் சென்றிருக்கிறாரா? அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? எல்லாம் விளம்பரமோகம் படுத்தும் பாடு! வெட்கக்கேடு!
ஆகவே, தவெக அரசின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுப்பள்ளிகளில் அத்துமீறுவதையும், அரசியலைப் புகுத்துவதுமான மோசமானப் போக்கைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் இனியாவது கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
A solid performance from the team and an unfortunate incident has put us on the back foot but we live to fight another day tomorrow. Keep the prayers going !
#AjithKumarRacing#AjithKumar#AjithRedAntRacing
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வருமான விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
உங்களுடைய பொதுவாழ்க்கைக்கானச் செயல்பாடுகளும், அரசியல் பணிகளும் சிறக்கட்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
அரசு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பிலிருந்து @polimernews, @NewsTamilTV24x7, @TamilJanamNews உள்ளிட்ட செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகள் தவெக அரசால் நீக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
@CMOTamilnadu@TVKVijayHQ
செய்தித்தொலைக்காட்சிகளை முடக்குவது என்பது சனநாயகத்தின் குரல்வளையை அதிகார கொடுங்கரங்களால் நெரிப்பதற்கு ஒப்பானது. இதற்கு பெயர்தான் சனநாயகமா? இதுதான் சனநாயகன் ஆட்சியா?
செய்தியாளர்களை சந்திக்கத்தான் முதல்வர் விஜய் அவர்களுக்கு துணிவில்லை. செய்திகளை சந்திக்கவும் துணிவில்லையா? செய்தி தொலைக்காட்சிகளை முடக்கினால் அன்றாடம் நடக்கும் ஆட்சியின் அவலங்களை மறைத்துவிடலாம் என்று நினைப்பது, கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்று நம்புவதை போன்று அறிவுக்கு புறம்பானது.
உண்மைச் செய்திகள் மக்களிடம் சேராமல், அரசு கேபிளிலிருந்து செய்தித் தொலைக்காட்சிகளை இருட்டடிப்பு செய்வதில் காட்டும் வேகத்தையும், ஆர்வத்தையும் உங்கள் ஆட்சியில் விடிய விடிய தலைநகர் சென்னையில
இருட்டில் தவிக்கும் மக்களை காப்பதில் சிறிதேனும் காட்டுங்கள் முதல்வர் அவர்களே!
அதுதான் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற குறைந்தபட்ச நன்றியாக இருக்கும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு மாணவச்செல்வங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
தேர்வில் தோல்வியுற்ற மாணவ-மாணவியர் கலங்க வேண்டாம். அன்புப்பிள்ளைகள் சோர்ந்துவிடாது, மனந்தளராது தொடர்ந்து முயற்சி செய்து அடுத்துவரும் துணைத்தேர்வு வாய்ப்புகளின் மூலம் வெற்றி பெற்று, விருப்பமான மேற்படிப்பினைக் கற்க என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
மே-18, தமிழ்ப்பேரின எழுச்சி நாள்: விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே!
உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு,
அன்பு வணக்கம்!
இலங்கையை ஆளும் சிங்கள இனவாத ஆட்சியாளர்கள், இந்தியா உள்ளிட்ட உலக வல்லாதிக்க நாடுகளின் துணையோடு ஈழத்தாயகத்தில் நடத்திய இந்நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை முடிவுற்று, 2 இலட்சம் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு 17 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். அப்பேரழிவிலிருந்து மீண்டு, இனம்பட்ட கொடுந்துயருக்கும், இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கும் பன்னாட்டுச்சமூகத்திடமும், அனைத்துலக நாடுகளிடமும் நீதிகேட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்றளவும் போராடிக் கொண்டிருக்கிறோம். கோரிக்கை வைத்து மன்றாடுகிறோம். அரசியல் வழியாகவும், அறவழியாகவும், சட்டப்போராட்டங்கள் மூலமாகவும் நெருக்கடி கொடுத்து இனப்படுகொலை செய்திட்ட இலங்கை அரசின் மீது பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையையும், ஈழத் தாயக விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பையும் நடத்தக்கோரி உலகத்தமிழர்கள் பல்வேறு தளங்களில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றளவும் எந்தவொரு தீர்வும் கிடைத்தபாடில்லை; பொதுவாக்கெடுப்புக்கான முன்னெடுப்புகளும் நடைபெறவில்லை. ஏதும் செய்யவியலா கையறு நிலையில் தமிழர்கள் அதிகாரமின்றி உலகெங்கும் இருத்தப்பட்டிருக்கையில், புலமும், களமும், தமிழ்நாடும் வலிமையற்றுள்ள தற்காலத் துயர்மிகுச்சூழலில், தமிழர்கள் தங்களைத் தாங்களே உணர்வுச்சூடேற்றிக்கொண்டு, உள்ளத்தில் கொட்டிக்கிடக்கும் வன்மத்தை உரமேற்றிக்கொண்டு இன மீட்சிக்காக, தாயக விடுதலைக்காக மீண்டெழுந்து நிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுப் பெருங்கடமையாகிறது.
2009 ஆம் ஆண்டு மே-18 அன்று, தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் குண்டுவீசி கொலை செய்யப்பட்டு, ஈழத்தாயகம் முழுவதும் இரத்தச்சகதியிலே நனைந்து, ஒப்பாரியும், ஓலமும் நாட்புறமும் எதிரொலிக்க இரண்டு இலட்சம் தமிழர்களின் பிணக்குவியல்கள் நடுவில், முள்ளிவாய்க்கால் நிலத்தில் யாவும் முற்றுப்பெற்று விட்டதாக இன எதிரிகள் எக்காளமிட்டு சிரித்த நாள். எவ்விடத்தில் தமிழர்கள் முடிவுற்றதாக சிங்கள இனவாதமும், பன்னாட்டுச்சமூகமும் கருதியதோ அவ்விடத்திலேயே, ‘வீழ்வோம் என்று நினைத்தீரோ?’ என்று கேள்வி எழுப்பி, ‘விழ விழ எழுவோம்! ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே!’ எனும் இன மீட்சி முழக்கத்தை முன் வைத்து தமிழ்த்தேசிய இனம் மீண்டெழுந்து தாயகக்கனவை சாத்தியப்படுத்த வேண்டியது காலக்கடமையாகிறது.
கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களிடம் மெல்ல மெல்ல அதிகரித்து வந்த தமிழின உணர்வை அழித்திடவும், தமிழ்த்தேசியப் பேரெழுச்சியை தடுத்திடவும் அடுத்தடுத்து திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சிகள் பல நடைபெறும் சமகாலச்சூழலில் அதனை முறியடித்து நாம் நம்மடைய ஒற்றுமையையும், பலத்தையும் உலகிற்கு உணர்த்த வேண்டியது பேரவசியமாகிறது. நம்முடைய பேரெழுச்சி மிகுந்த பெருந்திரளான ஒன்றுகூடல் மூலம், எத்தனை எத்தனை சதித்திட்டங்கள் தீட்டினாலும், பெருகிவரும் தமிழ்த்தேசிய இன உணர்வை எவராலும் தடுத்திட முடியாது என்பதை நிறுவுவோம்!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கிற அன்னைத் தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க அணியமாக வேண்டிய வரலாற்று பெருந்தருணமிது. ஆகவே, தமிழர்கள் இலட்சியவெறிக் கொண்ட வேங்கைகளாக எழுந்து பேரெழுச்சியோடு இனத்தின் விடியலுக்காகத் துணிந்து களமாட இந்நாளில் உறுதியேற்போம்.
நாளை 2026 ஆம் ஆண்டு மே 18 அன்று சென்னை மறைமலைநகரில் மாலை சரியாக 4 மணிக்கு நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவுள்ள தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பேரெழுச்சியுடன் பங்கேற்க உலகத்தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன்!
ஈழப்போரின் இறுதி நாட்களில் உணவுக்கு மட்டுமல்லாது அதில் சேர்க்கும் உப்புக்கும் வழியில்லாது அல்லற்பட்டக் கொடிய வறுமை நிலையிலிருந்த காலக்கட்டத்தில், நம் உறவுகள் அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சி, உப்பில்லா கஞ்சியையே உண்டு இனமீட்சிக்குப் போராடியிருக்கிறார்கள். அத்துயரினை நினைவுகூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வின்போது, உணர்வுப் பேரெழுச்சியுடன் உப்பில்லா கஞ்சியை நாமும் உண்டு, இன விடுதலைக்களத்தில் கொல்லப்பட்ட நம்மின உறவுகளை நினைவுகூர்ந்து, அவர்கள் பட்ட பெருந்துயரினை உலகுக்கு உணர்த்திட மறைமலைநகரில் ஒன்றுகூடுவோம்!
உள்ளத்தில் அணையா பெருநெருப்பாய் பற்றியெரியும் இன உணர்வினை அடைகாத்து, அதனை மற்றவருக்கும் பற்ற வைத்து இன விடுதலையை வென்றெடுக்கச் சூளுரைப்போம்!
இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்; இலக்கை வென்றாவோம்!
தமிழர்களின் தாகம்! தமிழீழத்தாயகம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி - சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில துணைச் செயலாளர் அன்புத்தம்பி கா.ரமேஷ் அவர்களின் மனைவி ர.ஆனந்தி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
உற்ற துணையை இழந்து வாடும் பாலு அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில்பங்கெடுக்கிறேன்.
தங்கை ர.ஆனந்தி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!